Tuesday 30 October 2012

பிராணவாயு (Oxygen)

பிராணவாயு (Oxygen)

கண்டறிந்தவர்: ஜோசஃப் ப்ரிஸ்ட்லி (Joseph Priestley)

காலம்: 1774


மனிதன் வாழ நீர், காற்று, புவி, நெருப்பு ஆகிய அடிப்படைக் கூறுகளின் தேவை பற்றி வெகுகாலமாக அறிந்திருந்தாலும், மற்ற கூறுகளின் தன்மை பற்றி ஆராய்ந்து அறிந்திருந்தாலும் காற்று பற்றி மட்டும் யாரும் அதிக ஆராய்ச்சி செய்யவில்லை. காற்றில் என்னென்ன வாயுக்கள் கலந்திருக்கின்றன? அவற்றினைப் பிரிப்பது எப்படி என்பது பற்றி அறிந்திருக்கவில்லை. அதை முதன்முதலில் செய்தவர் ஜோசஃப் ப்ரிஸ்ட்லி ஆவார்.

பொருட்கள் எரிவதற்கு அடிப்படைத் தேவை பிராணவாயு என்பதாலும் எரிதலின் போது என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக இருந்ததாலும் அவரது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. ப்ரிஸ்ட்லி மேலும் ஒரு வாயுவைப் பிரித்தறியும் போது எதையெல்லாம் கண்டறிய வேண்டும் அதை எப்படிக் கண்டறிய வேண்டும் என்பதையும் வரையறுத்தார். எடுத்துக்காட்டாக, வாயுவின் நிறம் என்ன, வாயுவில் விஷத்தன்மை உண்டா, நீரில் கரையுமா போன்ற கேள்விகளுக்குப் பதிலைக் கண்டறியலாம் என்று உணர்த்தினார்.

ரெவரெண்ட் ஜோசஃப் ப்ரிஸ்ட்லிக்குத் தனது தேவாலயப் பணிகளைக் காட்டிலும் வாயுக்களின் மேல் தான் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அடிப்படைக் கூறுகளில் ஒன்றான காற்று எதனால் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிய ஆர்வம் காட்டினார். இவருக்கு முந்தைய விஞ்ஞானிகள் பொருட்களில் ஏற்படும் வேதி வினையின் போது புதிய வாயுக்கள் குமிழிகளாக (நீருக்குள்ளிருந்து) வெளிவருகின்றன என்பதைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கின்றனர். இந்த வாயுவுக்கு அவர்கள் ‘முரட்டு வாயு’ என்று பெயர் சூட்டினார்கள். இந்த வாயு மரங்களை மூன்று மடங்கு வேகத்தில் எரிய வைக்கின்றது என்றும் முன்பே கண்டறிந்திருந்தனர். ஆனால் ஒருவராலும் இதைத் தனிமைப்படுத்திப் பிடித்து வைத்து ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. ப்ரிஸ்ட்லி இந்த வாயுக்களைப் பிரித்துப் பிடிக்கப் பலமுறைகளில் முயற்சி மேற்கொண்டார். 
1774 ஆண்டின் முற்பகுதியில் இவ்வாயுவைத் தலைகீழாய்க் கவிழ்த்து வைக்கப்பட்ட நீர்க்குடுவையினுள் நிரப்புவதன் மூலம் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆகஸ்டு 1, 1774 அன்று ஒரு சக்தி மிக்க உருப்பெருக்கக் குவியாடியின் மூலம் சூரிய வெளிச்சத்தை ஒரு கண்ணாடிப் புட்டிக்குள் பொடியாக்கப்பட்ட mercurius calcinatus எனப்படும் பாதரச ஆக்ஸைடின் மீது விழச் செய்தார். அந்தப் புட்டியின் வாய்ப்பகுதி ஒரு தக்கையால் அடைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலிருந்து ஒரு கண்ணாடிக் குழாய் மற்றொரு நீர்த் தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்த நீர்த்தொட்டியினுள் தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு புட்டிக்குள் இந்தக் குழாயின் மறுபகுதி இருந்தது. இதனால் வேதிவினையால் உருவாகும் வாயு வேறெங்கும் செல்ல முடியாமல் நீர்க்குடுவையினுள் அடைபட்டுக் கொண்டது! மெர்க்குரி ஆக்ஸைடு சூடாக ஆரம்பித்ததும் அதிலிருந்து கிளம்பிய வாயு நேராக குடுவைக்குள் சென்றது. ப்ரிஸ்ட்லி இது போன்ற மூன்று குடுவைகளில் அந்த வாயுவைப் பிடித்து வைத்துக் கொண்டார். இதன் மூலம் முதன்முதலில் ஒரு வாயுவைத் தனிமைப்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தார்.

முதல் குடுவையின் வாயில் ஒரு எரியும் மெழுகுவர்த்தியைப் பிடித்துப் பார்த்தார். மெதுவாக எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி சடாரென தீப்பந்து போல் எரிய ஆரம்பித்தது! அனைவரும் சொன்னது போலவே இவ்வாயு எரிதலை வேகப்படுத்துகின்றது என்று கண்டறிந்தார்!

ப்ரிஸ்ட்லி சாதாரணமாக அறையில் நிறைந்திருக்கும் காற்றினைக் கொண்ட இன்னொரு குடுவையையும் அருகில் வைத்துக் கொண்டார். இரண்டிற்குள்ளும் ஒவ்வொரு எலியைப் போட்டார். சாதாரண குடுவைக்குள் 20 நிமிடங்கள் வரை மூச்சுத்திணறல் இல்லாமல் இருந்தது எலி. ஆனால் இப்போது பிடித்து வைத்த குடுவைக்குள்ளோ 40 நிமிடங்களுக்கு மேலும் எலிக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே இல்லை! அப்படியானால் இது “தூய வாயு” என்று முடிவுக்கு வந்தார் ப்ரிஸ்ட்லி.

இன்னொரு குடுவையைத் தனது மூக்கினருகே வைத்துக் கண்களை மூடிக் கொண்டு இருதயம் படபடக்க அதிலிருக்கும் வாயுவை உள்ளிழுத்தார் ப்ரிஸ்ட்லி! அந்த வாயுவைச் சுவாசித்ததும் எந்தப் பிரச்னையும் ஏற்படாதது மட்டுமல்ல, அவருக்குள் அந்த வாயுவினால் ஒரு சக்தியும் பிறப்பதைக் கண்டார். அந்த வாயு மிகவும் லேசாகவும், வாயுவைச் சுவாசிப்பது மிகவும் சுகமாகவும் இருப்பதைக் கண்டு கொண்டார்.

பாரீஸில் இருந்த மற்றொரு விஞ்ஞானியான அந்தோணி லவாய்ஸியர் (Antoine Lavoisier) ப்ரிஸ்ட்லி தனிமைப் படுத்திய இந்த வாயுவுக்கு ஆக்ஸிஜன் என்று பெயர் சூட்டினார்

No comments:

Post a Comment