Tuesday 30 October 2012

புவி-சூரிய தூரம், அண்டத்தின் அளவு

புவி-சூரிய தூரம், அண்டத்தின் அளவு
கண்டறிந்தவர்: ஜியோவான்னி காசினி (Giovanni Cassini)
காலம்: 1672


அண்டவெளியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இரண்டு அடிப்படை விஷயங்கள் உதவிபுரிகின்றன. முதலில் நட்சத்திரங்களுக்கிடையே இருக்கும் தூரம் பற்றி அறிந்து கொள்தல், இரண்டாவதாக அந்த நட்சத்திரத்தின் வேதியியல் மூலப் பொருள் எதுவென்று கண்டறிதல்.

காசினியின் துல்லியமான தூரக் கணிப்பு விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்த பல விஷயங்களைத் தூக்கி உடைப்பில் போடுவதாக இருந்தது. நட்சத்திரங்கள் வெறும் மில்லியன் கி.மீ. தூரத்தில் இருப்பதாக நினைத்தது எல்லாம் எத்தனை தவறு என்று அறிந்து திருத்திக் கொண்டதும், அண்டத்தின் கற்பனைக்கெட்டாத அளவைப் பற்றிப் புரிந்து கொண்டதும் காசினியால் மட்டுமே சாத்தியமானது.

காசினி எவ்வாறு கண்டறிந்தார்?

1625ல் இத்தாலியில் பிறந்த காசினி ஜோதிடத்தில் மிகவும் ஆர்வலராக இருந்தார். பின்னாளில் ஜோதிடம் அனைத்தும் உண்மையல்ல என்று எழுதினாலும் கூட அந்தத் துறையில் புகழ்மிக்கவராகவே விளங்கினார் காசினி.

அவரது விண்ணியல் ஆர்வம் கண்டு அவருக்கு பாரீஸ் விண்காட்சியகத்தில் பதவியளிக்கப்பட்டது. தனது பெயரை Jean Dominique Cassini என்று மாற்றிக் கொண்டார் காசினி. அவரது சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் சுற்றும் காலம், சனி கிரகத்தின் வளையங்களுக்குள் இருக்கும் இடைவெளி ஆகிய புகழ்மிக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். இப்போது அந்த இடைவெளிகள் காசினி இடைவெளிகள் என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒளி ஒரு முற்றான வேகத்தில் செல்கின்றது என்று முதன்முதலில் யூகித்தவரும் இவரே ஆவார். ஆனாலும், ஒளியைக் கடவுளுக்கு ஒப்பாக வைத்திருந்ததாலும், மதக் கொள்கைகளாலும், ஒளியின் முற்றான வேகம் என்னும் கொள்கையை உடைத்தெறிய பல சோதனைகளை நிகழ்த்தினார். ஆயினும், அத்தனை சோதனைகளும் தோல்வியையே தந்தன!

கத்தோலிக்கரான காசினி புவிமையக் கொள்கையையே நம்பினார். பின்னர் சூரியன் தான் மையத்திலிருக்கின்றது என்று அரைமனதுடன் நம்பினார். சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தொலைவை அறிய முற்பட்டார். 

தொலைநோக்கியால் நேரடியாகப் பார்க்க முடியாத/பார்க்கக் கூடாத ஒரு பொருள் இவ்வையகத்தில் உண்டென்றால் அது சூரியன் மட்டுமே! தொலைநோக்கி வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இது தெரியும். கெப்ளரின் சமன்பாடுகள் மூலம், ஏதேனும் ஒரு கிரகத்துக்கும் புவிக்கும் இருக்கும் தூரத்தை அளக்க முடிந்தாலே அதைக் கொண்டு சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரத்தை அளக்க முடியும் என்று அறிந்து கொண்டார் காசினி.

பக்கத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தைப் பற்றி நன்கறிந்ததால், அதன் தூரத்தை அளக்க முடிவு செய்தார். திரிகோணமிதி எனப்படும் ட்ரிக்னாமெட்ரி கணித முறை மூலம், புவியின் இரு இடங்களிலிருந்து செவ்வாயின் ஒரு இடத்தின் கோண அளவைத் தெரிந்து கொண்டால், தூரமும் தெரியவந்து விடும் என்று முடிவு செய்தார்.

காசினி பாரிஸில் இருந்து கொண்டு, தனது சகாவான Jean Richerஐ தென்னமெரிக்காவின் வடக்குக் கடற்கரையிலிருக்கும் Cayenne என்னுமிடத்துக்கு அனுப்பினார். ஆகஸ்டு 1672 ஒரே நாளில் ஒரே சமயத்தில் இரு விஞ்ஞானிகளும், பின்புலத்தில் நட்சத்திரங்களின் இருப்பிடங்களுடன், செவ்வாய்க் கிரகம் இருக்கும் கோணத்தை அளந்தனர். இந்த அளவுகளையும் கெப்ளரின் சமன்பாடுகளையும் கொண்டு காசினி சூரியனுக்கும் புவிக்கும் இடையே இருக்கும் தூரம் 87 மில்லியன் மைல்கள் அல்லது 149.7 மில்லியன் கி.மீ. என்று அறிவித்தார். நவீன அறிவியல் கண்டறிந்த துல்லியமான தூரம் 93 மில்லியன் மைல்கள் ஆகும். 

இதே முறையில் சனியின் தூரத்தை அளந்த காசினி அது 1.6 பில்லியன் மைல்கள் தூரத்தில் இருப்பதாக அறிவித்தார். 

மனிதர்கள் தங்கள் கற்பனையால் கூட செய்து பார்க்க முடியாத அளவு அண்டம் பிரம்மாண்டமானது என்னும் உண்மையை உலகோர் உணரச் செய்தார் காசினி.

No comments:

Post a Comment