Tuesday 30 October 2012

பொருட்கள் மேலிருந்து கீழே விழும் வேகம் குறித்த விதி

பொருட்கள் மேலிருந்து கீழே விழும் வேகம் குறித்த விதி (The Law of falling objects)
கண்டுபிடித்தவர்: கலிலியோ கலிலி (Galileo Galilei)
கண்டுபிடித்த ஆண்டு: 1598


எடை அதிகமுள்ள பொருட்கள் வேகமாகவும், எடை குறைந்த பொருட்கள் மெதுவாகவும் விழும் என்ற முந்தைய நம்பிக்கைகளை உடைத்தெறிந்ததால் மட்டும் கலிலியோவின் இந்த விதி நூற்றில் ஒன்றாகக் கருதப்படவில்லை. அவரது கண்டுபிடிப்பு அடுத்தடுத்து நியூட்டனின் அசைவு விதிகள், புவியீர்ப்பு விதி மற்றும் இன்றைய இயற்பியல், விண்ணியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டதாகவும் இருந்ததால் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகின்றது.

எப்படிக் கண்டறிந்தார்?

கலிலியோ தனது 24வது வயதில் இத்தாலியின் பைசா நகரத் தேவாலயத்தில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்தார். மேலே கட்டப்பட்டிருந்த சரவிளக்குகள் காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தன. இந்த விளக்குகளெல்லாம் ஒரே வேகத்தில் ஆடுவது கண்டு வியந்தார் கலிலியோ. விளக்கேற்றும் சிறுவர்களைக் கொண்டு சிறிய விளக்குகள், பெரிய விளக்குகள் என்று பலவற்றையும் வேகமாகத் தள்ளிவிடச் சொல்லி, தனது கழுத்திலிருக்கும் நாடித்துடிப்பைக் கணக்கில் கொண்டு அவை ஆடும் வேகத்தைக் கணக்கிட்டார். எந்த விளக்காக இருந்தாலும் ஒரு சுற்று வருவதற்கு அதே நேரம் தான் ஆகின்றது என்று கணக்கிட்டார். 

ஒருநாள் வகுப்பில் எடைவித்தியாசமுள்ள இரு செங்கற்களைக் கையில் வைத்துக் கொண்டு, "நான் பெண்டுலங்கள் ஆடுவதை ஆராய்ச்சி செய்து பார்த்தேன். ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றேன். அரிஸ்டாட்டில் சொன்னது தவறாகும்." என்று கூறினார். வகுப்பு வியப்பிலாழ்ந்தது. அரிஸ்டாட்டில் எடை அதிகமான பொருள் வேகமாகவும், எடை குறைவான பொருள் மெதுவாகவும் செல்லும் என்று கூறியிருந்தார். அது தவறு என்று கலிலியோ நிரூபிக்க நினைத்தார். செங்கற்களை ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டும் ஒரே நேரத்திலேயே விழுந்தன. 

கலிலியோ பைசா நகரச் சாய்ந்த கோபுரத்திலிருந்து 10 பவுண்டு எடையும், ஒரு பவுண்டு எடையும் உள்ள இரு குண்டுகளை 191 அடி உயரத்திலிருந்து போட்டு இரண்டும் ஒரே நேரத்தில் கீழே விழுந்ததைப் பொதுவில் நிரூபித்தார் என்று கூறப்படுகின்றது. அது உண்மையாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், கலிலியோ கண்டறிந்தது மட்டும் நிஜமாகும்.

1 comment: