தாமஸ் ரைட் மற்றும் வில்லியம் ஹெர்ஷல் (Thomas Wright and William Herschel)
காலம்: 1750
தாமஸ் ரைட்
வில்லியம் ஹெர்ஷல்
காலம்: 1750
தாமஸ் ரைட்
வில்லியம் ஹெர்ஷல்
நன்றி: விக்கிபீடியா
பூமி தான் அண்டத்தின் மையம்
என்று வெகுகாலம் நம்பிக் கொண்டிருந்தனர். பின்னர் சூரியனைச் சுற்றியே
கோள்கள் இயங்குகின்றன என்று கண்டறிந்ததும் சூரியன் தான் அண்டத்தின் மையம்
என்று கருத ஆரம்பித்தனர். தாமஸ் ரைட் வந்து சூரியன் ஒரு பெரிய நட்சத்திர
மண்டலத்தின் ஒரு பகுதியாகத் தான் இருக்கவேண்டும் என்று கற்பனை செய்யவும்,
அதைச் சில ஆண்டுகள் கழித்து வில்லியம் ஹெர்ஷல் நிரூபிக்கவும் செய்த பின்னர்
தான் நட்சத்திர மண்டலம் என்பது உணரப்பட்டது. அண்டத்தின் வடிவமைப்பு
பற்றிய மனிதனின் அறிவு இன்னும் கொஞ்சம் விசாலமடைந்தது.
தாமஸ் ரைட் கணிதமும், அண்டவெளி
விஞ்ஞானமும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார். கடவுள் மீது அபரிதமாக
நம்பிக்கை வைத்திருந்தார். நட்சத்திரங்கள் அனைத்தும் சொர்க்கத்திலிருந்து
கடவுளால் பதித்து வைக்கப்பட்டிருப்பவை என்று நம்பினார். அவை அனைத்தும்
குறிப்பிட்ட இடைவெளியிலேயே வரிசையாக அடுக்கப்பட்டிருந்ததாகவும் நம்பினார்.
ஆனால், உண்மை நிலையைத் தொலைநோக்கியில் காணும் போது நட்சத்திரங்கள்
அவ்வாறு இல்லாமல் வானமெங்கும் சிதறி விட்டது போல் கிடப்பதைக் கண்டார்.
அவரது காலத்தில் நட்சத்திரங்கள்
குறித்த கற்பனைகள் பலவாறு இருந்தன. சூரியனும் மற்ற கோள்களும் ஒரு மிகப்
பெரிய கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும், கூட்டுக்கு வெளியே
நட்சத்திரங்களைப் பதித்து வைத்திருப்பதாகவும், கூட்டுக்குள் சூரியனும்
கோள்களும் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. எனவே சூரியன் தான் அண்டத்தின்
மையமாகவும் கருதப்பட்டது. இன்னும் சிலரோ, அண்டத்தின் வெளிப்புறம்
எப்போதும் ஒளிமயமாக இருப்பதாகவும், (Perpetual Day) அண்டத்தில் ஏற்பட்ட
சிறு துளைகளின் வழியே ஒளி வருவதாகவும், அதுவே நட்சத்திரங்களென்றும்
கருதினர்!
தாமஸ் ரைட் தொலைநோக்கியில் காணும்
போது நட்சத்திரங்கள் வரிசையாக நடப்படவில்லை என்று முதலில் கண்டார். அதன்
பின்னர், பல நட்சத்திரங்கள் ஒரே பட்டையாக பால்வெளி வீதியினை ஒட்டியே
இருப்பதையும் கண்டார். ஒரு பெரிய புல்வெளியில் பனித்துளிகள் தான்
நட்சத்திரங்கள் என்று கற்பனை செய்தார் ரைட். இப்போது பனித்துளிகளை
மேலிருந்து காணும் போது அவற்றிற்கிடையே இடைவெளியைக் காண முடியும். அதே
பனித்துளிகளைப் பக்கவாட்டில் அல்லது தரைமட்டத்தில் இருந்து காணும் போது
நட்சத்திரங்கள் புல்வெளியை ஒட்டியே காணப்படும் என்றும்
நட்சத்திரங்களுக்கிடையே இருக்கும் இடைவெளி கண்களுக்கு மாறாகத் தெரியும்
என்றும் கற்பனை செய்தார் ரைட்! அதாவது கடவுள் நட்சத்திரங்களை வரிசையாக
இடைவெளி விட்டே வைத்திருக்கின்றாரென்றும், நாம் இருக்கும் இடமும், காணும்
முறையுமே நமக்கு நட்சத்திரங்கள் பட்டையாகத் தெரியக் காரணம் என்றும்
முடிவுக்கு வந்தார் ரைட்.
அவ்வாறு கற்பனை செய்ததை மேலும்
உண்மையாக்க, சனி கிரகத்தின் வளையங்கள் உதவி புரிந்தன. இது போன்ற வளையத்தில்
சூரியன் என்னும் நட்சத்திரமும் இருந்தால், மற்ற நட்சத்திரங்கள் யாவும்
எப்படித் தெரியுமோ அதே போன்று தான் பால்வெளி வீதியின் நட்சத்திரங்களும்
தெரிகின்றன என்று எளிதாக ரைட்டால் விளக்க முடிந்தது.
ஆயினும் தாமஸ் ரைட்டால் கற்பனை
செய்து பார்க்க முடிந்ததை 35 ஆண்டுகள் கழித்து அதாவது 1785ல் நிரூபணம்
செய்தார் வில்லியம் ஹெர்ஷல். ஹெர்ஷல் புள்ளியியல் முறைகளின் படி
நட்சத்திரங்களை எண்ண முனைந்தார். ஆனாலும் அவரால் முடியவில்லை. எனவே
வானத்தை 683 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகமாக அப்போது மிகப்பெரியதாக
இருந்த 48 அங்குல தொலைநோக்கி வழியாக நட்சத்திரங்களைக் கண்டு அவற்றை எண்ண
ஆரம்பித்தார்.
அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கும்
வகையில் பால்வெளி வீதியின் அருகே மட்டும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிக
அதிகமாக இருந்தது. அதற்கு நேரெதிரில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிகக்
குறைவாக இருந்தது. தாமஸ் ரைட்டின் ரசிகரான வில்லியம் ஹெர்ஷல், தாமஸ்
ரைட்டின் அமைப்பான ஒரு பெரிய வளையத்தின் நடுவே சூரியனும் பூமியும்
இருக்கும் போது அந்த வளையத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் காணும் போது
இடைவெளி மிகக் குறைவாகவும் எண்ணிக்கையில் அதிகமாகவும், அதற்கு
எதிர்த்திசையில் இருக்கும் நட்சத்திரங்களுக்கிடையே இடைவெளி அதிகமாகவும்,
எண்ணிக்கை குறைவாகவும் தோன்றும் என்னும் அமைப்பு சரியாக ஒத்து வருவதை
புள்ளியியலின் படி நிரூபித்தார்.
சூரியன் ஒரு குவிந்த பெரிய வளையத்தில் ஒரு மூலையில் இருந்தால் மட்டுமே இது போன்று தெரிய சாத்தியம் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
நட்சத்திர மண்டலங்களுக்கு ஏற்கனவே தாமஸ் ரைட் வைத்த பெயரான Galaxy என்பதே வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment