Wednesday 31 October 2012

நெம்புகோல் தத்துவம் மற்றும் அழுத்த விளைவுகள்

மிகவும் புகழ்பெற்ற 100 Greatest Science Discoveries Of All Time என்னும் அழகான அறிவியல் புத்தகத்தின் சுருக்கமான மொழிபெயர்ப்பைப் பகிர்ந்து கொள்கின்றேன். இதை அரும்பாடுபட்டுத் தொகுத்தவர் Kendall Haven ஆவார். மூலப் புத்தகத்தின் அருகில் கூடக் கொண்டு செல்ல முடியாவிடினும், என்னால் இயன்ற வரை தர முயற்சி செய்கின்றேன். 

1. நெம்புகோல் தத்துவம் மற்றும் அழுத்த விளைவுகள்
கண்டறிந்தவர்: ஆர்க்கிமிடிஸ்
காலம்: கி.மு.260

இவ்விரண்டு தத்துவங்களை இவர் கண்ட விதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. 

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு இடுப்புயரக் கல்லின் மேல் ஒரு நீளமான பலகையைப் போட்டு ஒருபக்கம் மூன்று மாணவர்களும், இன்னொரு புறம் ஒரே ஒரு மாணவனும் நின்று கொண்டிருந்தனர். இருந்தாலும் யாரும் கீழே விழவில்லை. எப்படி ஒரு மாணவனால் அந்தப் பக்கம் இருக்கும் மூன்று மாணவர்களும் கீழே விழாமல் நிற்க வைக்க முடிகின்றது என்று யோசித்தார். இதற்கு முன்பே அனுபவத்தில் பலர் கண்டு பயன்படுத்தி வந்தாலும் ஆர்க்கிமிடிஸ் நெம்புகோல் தத்துவத்தைப் பற்றி உணர்ந்து அதன் தன்மைகளை அளந்து வைத்தார். பல சமன்பாடுகளின் மூலம் விளக்க முனைந்தார். அவரது கண்டுபிடிப்பு இன்றும் இயற்பியலிலும், பொறியியலிலும் பயன்படுத்தப்படுகின்றது.

இன்னொன்று மிகவும் புகழ்பெற்றது தான். அரசர் Hieron சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது தான் அது. ஒரு சுத்தமான தங்கக்கட்டியைக் கொடுத்து கிரீடம் செய்து தரச் சொன்னார் அரசர். பொற்கொல்லர் செய்து கொண்டு வந்த கிரீடத்தில் தங்கம் தான் இருக்கின்றதா அல்லது வேறு ஏதேனும் உலோகம் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதே அரசரின் ஐயம். தராசில் எடை மிகச் சரியாகவே இருந்தது. 

இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்த போது இந்த வாய்ப்பை ஆர்க்கிமிடிஸிடம் தந்தார் அரசர். 

ஆர்க்கிமிடிஸ் குளியலறைத் தொட்டியில் குளிக்கும் போது தண்ணீரின் மட்டம் உள்ளே அமிழ்வதால் மாறுவதைக் கண்டறிந்தார். ஒரே எடையுடைய ஒரு கல் மற்றும் ஒரு தக்கையைத் தண்ணீரின் மேல் போட்டார். கல் அமிழ்ந்து விட்டது. தக்கை மிதந்தது. இரண்டும் ஒரே எடையுடையது தான் என்றாலும் அது தண்ணீரின் மட்டத்தை மாற்றும் அளவு மாறுபடுகின்றது என்பதைக் கண்டறிந்தார். இதற்குக் காரணம் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு அடர்த்தி இருக்கின்றது என்றும் அறிய முடிந்தது. 'யுரேகா' என்று கூவியபடி அரசவைக்கு ஓடினார். 

தங்கத்தின் அடர்த்தி வேறு. வேறு உலோகங்களின் அடர்த்தி வேறு. சுத்தமான தங்கம் தண்ணீர் மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும், கிரீடம் தண்ணீர் மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும் அளந்து கிரீடத்தில் வேறு உலோகம் கலந்திருக்கின்றது என்று நிரூபித்து பொற்கொல்லனைத் தண்டிக்க வைத்தார். 

ஆக, நெம்புகோல் தத்துவம் மற்றும் அடர்த்தி ஆகியவற்றை உலகுக்கு அறிமுகப்படுத்திய வகையில் உலகின் நூறு கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்களில் ஒருவராய் இன்றும் வலம் வருகின்றார்.

3 comments: