கோள்களின் நீள்வட்டப்பாதை
கண்டுபிடித்தவர்: ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler)
காலம்: 1609
கண்டுபிடித்தவர்: ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler)
காலம்: 1609
கோப்பர்நிகஸ் சூரிய மையக் கொள்கையினைக்
கண்டறிந்தாலும், எல்லாக் கோள்களும் வட்டமான பாதையிலேயே சுற்றி வருகின்றன
என்று கணித்தார். கெப்ளர் வந்து நீள்வட்டம் என்ற ஒன்றைக் கண்டறிந்த
பின்னர் தான் உண்மையான கோள்களின் பாதைகள் தெரியவந்தன. 400 ஆண்டுகளுக்கும்
மேலாக அவர் கணித்த அந்தப் பாதையில் தான் கோள்கள் வலம் வருகின்றன.
அதிலிருந்து இம்மி கூட நாம் மாற்ற வேண்டியதிருக்கவில்லை என்பது அது
எவ்வளவு துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் கெப்ளரின்
கண்டுபிடிப்பு 100ல் ஒன்றாக வருவதற்கான காரணத்தை வலியுறுத்துவதாகவும்
இருக்கின்றது.
1571ல் பிறந்த கெப்ளர் தனது
அத்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே பல உடல் உபாதைகள்
அவருக்கு இருந்தன. கண்களில் பார்வை கூர்மையில்லை. இருந்தும் 1597ல் டைகோ
ப்ரேஹ் (Tycho Brahe) என்னும் ஜெர்மானிய விஞ்ஞானிக்கு அவரது ஆராய்ச்சியில்
துணைபுரிபவராகப் பணியாற்ற ஆரம்பித்தார். டைகோவின் மொத்த ஆயுளும் செவ்வாய்
கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் கணிப்பதிலும் தான் சென்றது.
1601ல் அவர் இறந்த போது அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அனைத்தும்
கெப்ளரின் கையில் கிடைத்தன.
செவ்வாயின் பாதையைக் கவனிக்க
ஆரம்பித்தார் கெப்ளர். இடையில் கோப்பர்நிகஸின் சூரிய மையக்கொள்கையை
ஆதரித்த ப்ரூனோ கத்தோலிக்கர் தேவாலயத்தினால் எரிக்கப்பட்டிருந்தார்.
இருந்தாலும் கெப்ளர் சூரிய மையக்கொள்கையைக் கையில் எடுத்துக் கொண்டே
செவ்வாயை ஆராய்ந்தார். எந்தக் கணிதச் சமன்பாடும் செவ்வாயின் தடத்தை ஒட்டி
வரவில்லை. அவரது கூர்மையில்லாத பார்வை காரணமாக அவரது குருவின் குறிப்புகளை
முற்றிலும் நம்ப வேண்டிய சூழ்நிலை வேறு. நொந்து போன கெப்ளர், கிரகத்தின்
பாதை வட்டமாக இருக்கச் சாத்தியமில்லை என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டார்.
அது மட்டுமல்ல. அவ்வாறு கோள்கள் வட்டப்பாதையில் செல்லவில்லை என்றால், அவற்றின் வேகமும் சீராக இருக்காது என்றும் முடிவுக்கு வந்தார்.
இவ்விரு வட்டப்பாதையின்மை, வேகச்
சீரின்மை ஆகிய இரு முடிவுக்கும் இருக்கின்ற கருவிகள்/குறிப்புகள் கொண்டு
அவர் வந்தது தான் மிகப் பெரிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது.
கெப்ளரின் முதல் விதி இது: கோள்கள் நீள்வட்டப்பாதையில் வலம் வருகின்றன.
கெப்ளரின்
இரண்டாம் விதி இது: கோள்களின் வேகம் சீரானதாக இருப்பதில்லை. சூரியனுக்கு
அருகில் வரும் போது வேகமெடுத்துப் பின்னர் தூரம் செல்லும் போது மெதுவாகச்
செல்கின்றன.
இவ்விரண்டு விதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
1609ல் தன் கண்டுபிடிப்புகளை
உலகுக்கு அறிவித்த கெப்ளர், அதன் பின்னர் 18 ஆண்டுகளில் மற்ற ஆறு
கோள்களின் பாதைகளையும் துல்லியமாக வகுத்து வைத்தார். அப்போது தான்
கணிதத்தில் ஜான் நேப்பியர் கண்டறிந்த லாகரிதம் என்னும் மடக்கைக்
கணிதத்தையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார் எனலாம்.
சூரிய குடும்பம் என்றில்லை,
அண்டவெளியில் எந்த ஒரு நட்சத்திரம் இருந்தாலும், அதற்குக் கிரகம் என்று
ஒன்று இருந்தால், கெப்ளரின் இந்த விதிகளின் மூலமே அவைகள்
கண்டறியப்படுகின்றன. கோள்கள் அருகில் செல்லும் போது நட்சத்திரமும் சிறிது
ஆட்டம் காண்கின்றது. அந்த ஆட்டத்தினை வைத்து கோள்கள் இருக்கின்றனவா
இல்லையா என்று கண்டறிய முடியும்.
உடல் உபாதைகளைப்
பொருட்படுத்தாமல், ஆர்வம் முந்த மிகத் துல்லியமாகக் கோள்களின் பாதையை
வகுத்துக் கொடுத்த கெப்ளரின் கண்டுபிடிப்பு உண்மையிலேயே அநாயாசமானது தான்.
நிலவிலிருக்கும் ஒரு பள்ளத்தாக்குக்கு இவரது பெயர்
வைக்கப்பட்டிருக்கின்றது.
No comments:
Post a Comment