Wednesday 31 October 2012

அறிவியல், ஆச்சர்யம், அட்டைப்பூச்சி!!

அறிவியல், ஆச்சர்யம், அட்டைப்பூச்சி!!

சமீபத்தில் வால்பாறை சென்று வந்த என் நண்பர்கள் கொண்டு வந்த அனுபவம் என் புருவங்களை உயர்த்தச் செய்ததுஅவர்கள் அனுபவம் என்று சொல்வதைவிடஅனுபவத்தில் கொண்டு வந்த செய்தி எனலாம்.

காரில் பயணம் செய்த மூவரில் இருவர் அட்டையின் (Leech) கடிக்கு இலக்காகி ரத்தம் சொட்ட சொட்ட நனைந்த கால்களுடன் காருக்கு வெளியே குதித்து, சூழ்நிலை முழுவதும் புரிந்து இது அட்டைக் கடித்தான் என்று அவர்கள் உணர சற்று நேரம் பிடித்திருக்கிறது. கடித்த அட்டைப்பூச்சிகளில் ஒன்றை மட்டுமே அவர்கள் காரில் சீட்டுக்கு அடியில் கண்டு பிடித்தார்கள். இன்னொன்று பற்றிய தகவல் இல்லை. அவர்கள் இருவருக்குமே நிற்காமல் கால்களில் ரத்தம் வடிந்ததே தவிர, கொஞ்சமும் வலி இல்லை.


அட்டை அவர்கள் மீது ஏறியதோ, அவர்களைக் கடித்ததோ அவர்களுக்குத் தெரியாத காரணம் நம் வாயைப் பிளக்க வைக்கும் ஒரு அறிவியல் ஆச்சர்யம். அட்டை நம்மைக் கடிக்குமுன், கடிக்கப் போகும் பகுதி மரத்துப் போக ஒரு ஊசி போடுகிறது (local anesthesia). பின்னர் முடிந்த மட்டும் நம் ரத்தத்தை உறிஞ்சி, தன் உடலில் உள்ள ஒரு டஜன் சேமிப்புக் குழாய்களிலும் ரத்தத்தை சேகரித்துக் கொண்டபின் தன்னாலேயே கீழே உதிர்ந்து விடுகிறது.  இயற்கையின் படைப்பை என்னவென்பது?

நெம்புகோல் தத்துவம் மற்றும் அழுத்த விளைவுகள்

மிகவும் புகழ்பெற்ற 100 Greatest Science Discoveries Of All Time என்னும் அழகான அறிவியல் புத்தகத்தின் சுருக்கமான மொழிபெயர்ப்பைப் பகிர்ந்து கொள்கின்றேன். இதை அரும்பாடுபட்டுத் தொகுத்தவர் Kendall Haven ஆவார். மூலப் புத்தகத்தின் அருகில் கூடக் கொண்டு செல்ல முடியாவிடினும், என்னால் இயன்ற வரை தர முயற்சி செய்கின்றேன். 

1. நெம்புகோல் தத்துவம் மற்றும் அழுத்த விளைவுகள்
கண்டறிந்தவர்: ஆர்க்கிமிடிஸ்
காலம்: கி.மு.260

இவ்விரண்டு தத்துவங்களை இவர் கண்ட விதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. 

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு இடுப்புயரக் கல்லின் மேல் ஒரு நீளமான பலகையைப் போட்டு ஒருபக்கம் மூன்று மாணவர்களும், இன்னொரு புறம் ஒரே ஒரு மாணவனும் நின்று கொண்டிருந்தனர். இருந்தாலும் யாரும் கீழே விழவில்லை. எப்படி ஒரு மாணவனால் அந்தப் பக்கம் இருக்கும் மூன்று மாணவர்களும் கீழே விழாமல் நிற்க வைக்க முடிகின்றது என்று யோசித்தார். இதற்கு முன்பே அனுபவத்தில் பலர் கண்டு பயன்படுத்தி வந்தாலும் ஆர்க்கிமிடிஸ் நெம்புகோல் தத்துவத்தைப் பற்றி உணர்ந்து அதன் தன்மைகளை அளந்து வைத்தார். பல சமன்பாடுகளின் மூலம் விளக்க முனைந்தார். அவரது கண்டுபிடிப்பு இன்றும் இயற்பியலிலும், பொறியியலிலும் பயன்படுத்தப்படுகின்றது.

இன்னொன்று மிகவும் புகழ்பெற்றது தான். அரசர் Hieron சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது தான் அது. ஒரு சுத்தமான தங்கக்கட்டியைக் கொடுத்து கிரீடம் செய்து தரச் சொன்னார் அரசர். பொற்கொல்லர் செய்து கொண்டு வந்த கிரீடத்தில் தங்கம் தான் இருக்கின்றதா அல்லது வேறு ஏதேனும் உலோகம் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதே அரசரின் ஐயம். தராசில் எடை மிகச் சரியாகவே இருந்தது. 

இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்த போது இந்த வாய்ப்பை ஆர்க்கிமிடிஸிடம் தந்தார் அரசர். 

ஆர்க்கிமிடிஸ் குளியலறைத் தொட்டியில் குளிக்கும் போது தண்ணீரின் மட்டம் உள்ளே அமிழ்வதால் மாறுவதைக் கண்டறிந்தார். ஒரே எடையுடைய ஒரு கல் மற்றும் ஒரு தக்கையைத் தண்ணீரின் மேல் போட்டார். கல் அமிழ்ந்து விட்டது. தக்கை மிதந்தது. இரண்டும் ஒரே எடையுடையது தான் என்றாலும் அது தண்ணீரின் மட்டத்தை மாற்றும் அளவு மாறுபடுகின்றது என்பதைக் கண்டறிந்தார். இதற்குக் காரணம் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு அடர்த்தி இருக்கின்றது என்றும் அறிய முடிந்தது. 'யுரேகா' என்று கூவியபடி அரசவைக்கு ஓடினார். 

தங்கத்தின் அடர்த்தி வேறு. வேறு உலோகங்களின் அடர்த்தி வேறு. சுத்தமான தங்கம் தண்ணீர் மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும், கிரீடம் தண்ணீர் மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும் அளந்து கிரீடத்தில் வேறு உலோகம் கலந்திருக்கின்றது என்று நிரூபித்து பொற்கொல்லனைத் தண்டிக்க வைத்தார். 

ஆக, நெம்புகோல் தத்துவம் மற்றும் அடர்த்தி ஆகியவற்றை உலகுக்கு அறிமுகப்படுத்திய வகையில் உலகின் நூறு கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்களில் ஒருவராய் இன்றும் வலம் வருகின்றார்.

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்

சூரியனை மையமாகக் கொண்டு புவி சுற்றி வருகின்றது.
கண்டறிந்தவர்: நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்
காலம்: கி.பி. 1520


கோப்பர்நிக்கஸ் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியாளர். தான் சேகரித்த பல தகவல்களையும், தனக்கு முன்னர் பலர் சேகரித்திருந்த தகவல்களையும் வைத்து 2000 ஆண்டுகளாக மக்கள் நம்பிக் கொண்டிருந்த புவிமையக் கொள்கையை மாற்றி சூரிய மையக் கொள்கையை எடுத்து வைத்தார். மேலும், அறிவியலில் சேகரித்திருக்கும் தகவல்களை வைத்து முடிவுக்கு வரலாம் என்ற வழிமுறையையும் கொண்டு வந்தார். அதற்கு முன்பு வரை யாராவது ஒருவரின் எண்ணத்தில் தோன்றுவதாகத் தான் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. இவரோ பல தகவல்களை வைத்து இப்படித் தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார். இப்போது பல கண்டுபிடிப்புகள் இந்த வழிமுறையின் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. எனவே அந்த வகையிலும் இவர் முன் நிற்கின்றார்.


கோப்பர்நிக்கஸ் இதைக் கண்டறிந்தது எவ்வாறு?



1499ல் இத்தாலியில் தனது பல்கலைப் படிப்பை முடித்த நிக்கஸ் போலந்தில் இருக்கும் ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அவருக்கு தேவாலயக் கோபுரத்தின் மேல் பகுதியில் அறை இருந்தது. அங்கிருந்து தனது வானியல் ஆராய்ச்சியை ஆரம்பித்தார் நிக்கஸ்.



அவரது காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க விஞ்ஞானி ஃப்டோளெமி உருவாக்கிய புவிமையக் கொள்கை நடைமுறையில் இருந்தது. அதாவது புவி நிலையாக நிற்பதாகவும், சூரியனிலிருந்து மற்ற கோள்கள் யாவும் புவியை ஒரு வட்டப் பாதையில் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. நட்சத்திரங்கள் யாவும் ஒரு மிகப் பெரிய கோள இடத்தின் வெளிப்புறத்தில் நிலையாக நிற்பனவையாகவும் கருதப்பட்டன. 



ஆனால், நாளாக நாளாக ஃப்டோளெமியின் வட்டப்பாதை விளக்கங்கள் சரியாக இல்லை. காரணம் அவர் குறித்த பாதையில் கோள்கள் தென்படாமல் விலகித் தெரிந்தன. அடுத்து வந்தவர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றியே வட்டப்பாதையை நீள் வட்டப் பாதையாக மாற்றிப் பார்த்தனர். அப்போதும் தவறு ஏற்பட ஆரம்பித்தது. நீள் வட்டங்களுக்குள் நீள் வட்டங்கள் என்று முயற்சி செய்தனர். அப்போதும் சிறிய அளவில் தவறுகள் ஏற்பட்டன. 



20 ஆண்டுகளாகத் தினமும் கோள்கள் இருக்கும் இடத்தினைக் குறித்து வைத்து அதனுடன் ஃப்டோளெமி மற்றும் மற்றவர்களின் கணிப்பையும் வைத்துச் சரிபார்த்த நிக்கஸ் இரண்டும் கொஞ்சமும் ஒத்துப் போகாததைப் பார்த்து அயர்ச்சியுற்றார். 



சரி, ஒவ்வொரு நகரும் கோளிலிருந்து இன்னொரு நகரும் கோள் எவ்வாறு பார்வைக்குத் தெரியும் என்று கணித்துப் பார்த்தார். அவை சரியாக நீள் வட்டங்களில் நகர்வது கண்டு ஆச்சரியமுற்றார். அப்படியானால் புவியும் ஒரு நகரும் கோளாக இருந்தால் என்னாகும்? என்று யோசனை தோன்றியது. இவ்வாறு அவர் முடிவுக்கு வரக் காரணம், ஒவ்வொரு கோளும் ஆண்டு முழுதும் வெவ்வேறு இடத்திலேயே தோன்றின. அது அவருக்குக் குழப்பமளித்தது. புவி மையமானதாக நகராததாக இருந்து கோள்கள் வட்டப்பாதையில் சுற்றி வந்தால் கோள்கள் மீண்டும் இருந்த இடத்திற்கே வரவேண்டுமே! அவ்வாறு வரவே இல்லையே! எனவே தான் புவியும் நகர்கின்றதோ என்று அவருக்குத் தோன்றியது.



அவரது 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் சூரியன் மட்டுமே தனது அளவு மாறாமல் தெரிகின்றது என்றும் மற்ற கோள்கள் சிறியதாகவும் பின்னர் பெரியதாகவும் தோன்றுகின்றன என்றும் அறிந்தார். ஆக, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் மாறுவதில்லை என்று உணர்ந்தார். 



ஆக, பூமி நகர்கின்றது என்பது ஒரு முடிவு. சூரியனுக்கும் பூமிக்கும் தூரம் மாறவில்லை என்பது ஒரு முடிவு. இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்த்தார். சூரியனை நடுவே கொண்டு பூமி சுற்றினால் மட்டுமே இது சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தார். அவரது கண்டுபிடிப்பை மையமாகக் கொண்டு அளந்து பார்த்தார். 



என்ன ஒரு அதிசயம்! சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் யாவும் ஒரே வட்டப்பாதையில் சுழன்று வந்தன. நாளை இந்தக் கோள் இங்கே தான் தெரிய வேண்டும் என்று அவரால் எளிதாக யூகிக்க முடிந்தது. என்ன ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு?



ஆனால், சோகம் என்னவென்றால், ஏற்கனவே இருப்பதை மறுத்துச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவரது ஆராய்ச்சிக்குறிப்புகளைப் பதுக்கியே வைத்திருந்தார். 1543ல் அவரது கண்டுபிடிப்புகள் அவரது வாழ்நாளுக்குப் பிறகே வெளிவந்தன. அதன் பின்னரும் 60 ஆண்டுகளாகப் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. 



கெப்ளரும், கலிலியோவும் பல சோதனைகள் மூலம் சூரியமையக் கொள்கையினை நிரூபித்து கோப்பர்நிக்கஸின் கண்டுபிடிப்பு சரியானதென்று உறுதி செய்த பின்னரே அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

Tuesday 30 October 2012

மனித உடற்கூறு (Human Anatomy) கண்டுபிடித்தவர்: ஆண்ட்ரியாஸ்

மனித உடற்கூறு (Human Anatomy)
கண்டுபிடித்தவர்: ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ் (Andreas Vesalius)
காலம்: கி.பி.1543



ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டு வந்திருக்கின்றது. மனிதனின் உடற்கூறு பற்றிய ஆராய்ச்சிகள் பலவும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. வெசாலியஸ் காலத்துக்கு முன்பு வரை கிரேக்கர்கள் உருவாக்கிய உடற்கூறு புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன. அவை விலங்குகளின் உடலை அறுத்துப் பார்த்து (முக்கியமாகக் குரங்குகள்) உருவாக்கியவை. அதை வைத்தே பல்வேறு மருத்துவ முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பல மூடநம்பிக்கைகளும், தவறான கருத்துகளும் இருந்தன. பலர் இதில் ஈடுபட்டிருந்தாலும் வெசாலியஸ் ஏன் இதில் முன்னோடியாகவும், முக்கியமானவராகவும் கருதப்படுகின்றார்?

வெசாலியஸ் அப்படி என்ன தான் சாதனை செய்தார்?

1515ல் பிறந்த வெசாலியஸின் தந்தை ஒரு மருத்துவர். அவர் ஒரு மிகப்பெரிய மருத்துவ நூல்கள் அடங்கிய நூலகத்தைப் பராமரித்து வந்தார். இளம் வெசாலியஸ் எப்போதும் தந்தையின் நூலகத்தில் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருந்தார். சிறு வயதிலேயே பூச்சிகளையும், சிறு விலங்குகளையும் அறுத்து உடற்கூறுகளைக் கண்டறிவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

தனது 18ம் வயதில் மருத்துவப் படிப்பு பயில்வதற்காக பாரிஸ் நகருக்குப் பயணமானார் வெசாலியஸ். அப்போதெல்லாம் உடற்கூறுகளை அறுத்துக் காட்டுவது பாடங்களில் அதிகமாக இல்லை. எப்போதாவது தேவைப்பட்டாலும், பேராசிரியர்கள் யாராவது ஒரு கசாப்புக் கடைக்காரரை விலங்கின் உடலை வெட்டச் சொல்லி பாகங்களைக் காட்டுவார்கள். கேலன் என்னும் கிரேக்க மருத்துவர் எழுதிய உடற்கூறு புத்தகம் உடற்கூறுகளின் வேதப்புத்தகமாக இருந்தது.

வெசாலியஸ் படிப்பில் படுசுட்டியாகவும், அதே சமயம் எப்போதும் எதிர்த்து விவாதம் செய்பவராகவும் அறியப்பட்டார். இரண்டாவது உடற்கூறு வகுப்பிலேயே கசாப்புக்காரரின் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி தானே அறுக்க ஆரம்பித்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவரது உடற்கூறு அறிவைக் கண்டு பலரும் அதிசயித்தனர்.

வெசாலியஸ் தலைமையில் ஒரு சிறிய கூட்டம் ஒவ்வொரு கல்லறையிலும் எலும்புக்கூடுகளைத் தேடி எடுத்து வருவதற்காகவே இருந்தது. அது மட்டுமல்ல, பலமுறை வெசாலியஸுக்கும் தெருநாய்களுக்கும் போட்டியே வந்திருக்கின்றது. பாரீஸின் மன்ஃபாகன் (Manfaucon)   பகுதியில் தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உடல்களைத் தூக்கி வீசுவார்கள். அந்த இடத்தில் தான் வெசாலியஸுக்குப் பல மனித உடல்கள் சுடச்சுடக் கிடைத்தன.



1537ல் இத்தாலிக்குக் குடிபெயர்ந்த‌ வெசாலியஸ் அங்கு ஒரு பேராசிரியராக தனது வகுப்புக்களைத் துவக்கினார். உண்மையான மனித உடற்கூறுகளைக் கொண்டு பாடம் நடத்த ஆரம்பித்தார். அவர் உடலை வெட்டும் லாவகத்தையும், தசைகள், நரம்புகள், உணவுக்குழாய்கள், மூளையின் திசுக்கள், எலும்பு மற்றும் உடலின் பல்வேறு பாகங்கள் குறித்து அவரது நடைமுறை விளக்கங்களையும் மாணவர்களும் ஏன் மற்ற பேராசிரியர்களுமே ஆச்சரியத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

1540ல் நடந்த ஒரு கூட்டத்தில் தான் முதன் முதலாக வெசாலியஸ் பொதுமேடையில் கிரேக்க கேலனின் புத்தகத்தை மூட்டை கட்டித்  தூக்கி வைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். கேலனின் புத்தகத்தில் இருக்கும் வளைந்த தொடை எலும்பு மனிதர்களுக்கு ஒத்துப் போகவே போகாது என்றும் அது குரங்குகளுக்கானது என்றும் விளக்கினார். அதுமட்டுமல்ல, மனித உடற்கூறுக்கும் கேலனின் புத்தக உடற்கூறுக்கும் 200 வித்தியாசங்கள் வரை பட்டியலிட்டார்.

அத்தோடு அவர் தனது பணிகளை நிறுத்தி விட்டு, மூன்றாண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல தேர்ந்த ஓவியக் கலைஞர்களைப் பணியிலமர்த்தி மனித உடற்கூறுகளுக்கான ஆயிரக்கணக்கான படங்களை வரையச் செய்தார். அவரே முன்னின்று அவர்களின் பணியை மேற்பார்வை செய்தார்.



1543ல் அவர் தனது ஆராய்ச்சியைப் புத்தகமாக வெளியிட்ட போது, அவரது உடற்கூறு புத்தகத்தை கேலனின் புத்தகம் கொண்டே தங்கள் பணியைச் செய்து வந்த மருத்துவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் பயங்கரமாகக் கோபமடைந்த வெசாலியஸ் தனது புத்தக நகல்கள் மொத்தத்தையும் தெருவில் பெரிய தீக்குண்டம் உருவாக்கி எரித்து விட்டார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது புத்தகத்தின் நகல் ஒன்று எரியாமல் கிடைத்ததால் 400 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்களின் உடற்கூறு வேதப்புத்தகமாக இன்று வரை அவரது புத்தகம் பயன்பாட்டில் இருக்கின்றது.

படஉதவி: விக்கிபீடியா.

பொருட்கள் மேலிருந்து கீழே விழும் வேகம் குறித்த விதி

பொருட்கள் மேலிருந்து கீழே விழும் வேகம் குறித்த விதி (The Law of falling objects)
கண்டுபிடித்தவர்: கலிலியோ கலிலி (Galileo Galilei)
கண்டுபிடித்த ஆண்டு: 1598


எடை அதிகமுள்ள பொருட்கள் வேகமாகவும், எடை குறைந்த பொருட்கள் மெதுவாகவும் விழும் என்ற முந்தைய நம்பிக்கைகளை உடைத்தெறிந்ததால் மட்டும் கலிலியோவின் இந்த விதி நூற்றில் ஒன்றாகக் கருதப்படவில்லை. அவரது கண்டுபிடிப்பு அடுத்தடுத்து நியூட்டனின் அசைவு விதிகள், புவியீர்ப்பு விதி மற்றும் இன்றைய இயற்பியல், விண்ணியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டதாகவும் இருந்ததால் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகின்றது.

எப்படிக் கண்டறிந்தார்?

கலிலியோ தனது 24வது வயதில் இத்தாலியின் பைசா நகரத் தேவாலயத்தில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்தார். மேலே கட்டப்பட்டிருந்த சரவிளக்குகள் காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தன. இந்த விளக்குகளெல்லாம் ஒரே வேகத்தில் ஆடுவது கண்டு வியந்தார் கலிலியோ. விளக்கேற்றும் சிறுவர்களைக் கொண்டு சிறிய விளக்குகள், பெரிய விளக்குகள் என்று பலவற்றையும் வேகமாகத் தள்ளிவிடச் சொல்லி, தனது கழுத்திலிருக்கும் நாடித்துடிப்பைக் கணக்கில் கொண்டு அவை ஆடும் வேகத்தைக் கணக்கிட்டார். எந்த விளக்காக இருந்தாலும் ஒரு சுற்று வருவதற்கு அதே நேரம் தான் ஆகின்றது என்று கணக்கிட்டார். 

ஒருநாள் வகுப்பில் எடைவித்தியாசமுள்ள இரு செங்கற்களைக் கையில் வைத்துக் கொண்டு, "நான் பெண்டுலங்கள் ஆடுவதை ஆராய்ச்சி செய்து பார்த்தேன். ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றேன். அரிஸ்டாட்டில் சொன்னது தவறாகும்." என்று கூறினார். வகுப்பு வியப்பிலாழ்ந்தது. அரிஸ்டாட்டில் எடை அதிகமான பொருள் வேகமாகவும், எடை குறைவான பொருள் மெதுவாகவும் செல்லும் என்று கூறியிருந்தார். அது தவறு என்று கலிலியோ நிரூபிக்க நினைத்தார். செங்கற்களை ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டும் ஒரே நேரத்திலேயே விழுந்தன. 

கலிலியோ பைசா நகரச் சாய்ந்த கோபுரத்திலிருந்து 10 பவுண்டு எடையும், ஒரு பவுண்டு எடையும் உள்ள இரு குண்டுகளை 191 அடி உயரத்திலிருந்து போட்டு இரண்டும் ஒரே நேரத்தில் கீழே விழுந்ததைப் பொதுவில் நிரூபித்தார் என்று கூறப்படுகின்றது. அது உண்மையாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், கலிலியோ கண்டறிந்தது மட்டும் நிஜமாகும்.

கோள்களின் நீள்வட்டப்பாதை

கோள்களின் நீள்வட்டப்பாதை

கண்டுபிடித்தவர்: ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler)

காலம்: 1609

கோப்பர்நிகஸ் சூரிய மையக் கொள்கையினைக் கண்டறிந்தாலும், எல்லாக் கோள்களும் வட்டமான பாதையிலேயே சுற்றி வருகின்றன என்று கணித்தார். கெப்ளர் வந்து நீள்வட்டம் என்ற ஒன்றைக் கண்டறிந்த பின்னர் தான் உண்மையான கோள்களின் பாதைகள் தெரியவந்தன. 400 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கணித்த அந்தப் பாதையில் தான் கோள்கள் வலம் வருகின்றன. அதிலிருந்து இம்மி கூட நாம் மாற்ற வேண்டியதிருக்க‌வில்லை என்பது அது எவ்வளவு துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் கெப்ளரின் கண்டுபிடிப்பு 100ல் ஒன்றாக வருவதற்கான காரணத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கின்றது.

1571ல் பிறந்த கெப்ளர் தனது அத்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே பல உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன. கண்களில் பார்வை கூர்மையில்லை. இருந்தும் 1597ல் டைகோ ப்ரேஹ் (Tycho Brahe) என்னும் ஜெர்மானிய விஞ்ஞானிக்கு அவரது ஆராய்ச்சியில் துணைபுரிபவராகப் பணியாற்ற ஆரம்பித்தார். டைகோவின் மொத்த ஆயுளும் செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் கணிப்பதிலும் தான் சென்றது. 1601ல் அவர் இறந்த போது அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அனைத்தும் கெப்ளரின் கையில் கிடைத்தன. 

செவ்வாயின் பாதையைக் கவனிக்க ஆரம்பித்தார் கெப்ளர். இடையில் கோப்பர்நிகஸின் சூரிய மையக்கொள்கையை ஆதரித்த ப்ரூனோ கத்தோலிக்கர் தேவாலயத்தினால் எரிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் கெப்ளர் சூரிய மையக்கொள்கையைக் கையில் எடுத்துக் கொண்டே செவ்வாயை ஆராய்ந்தார். எந்தக் கணிதச் சமன்பாடும் செவ்வாயின் தடத்தை ஒட்டி வரவில்லை. அவரது கூர்மையில்லாத பார்வை காரணமாக அவரது குருவின் குறிப்புகளை முற்றிலும் நம்ப வேண்டிய சூழ்நிலை வேறு. நொந்து போன கெப்ளர், கிரகத்தின் பாதை வட்டமாக இருக்கச் சாத்தியமில்லை என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டார்.

அது மட்டுமல்ல. அவ்வாறு கோள்கள் வட்டப்பாதையில் செல்லவில்லை என்றால், அவற்றின் வேகமும் சீராக இருக்காது என்றும் முடிவுக்கு வந்தார். 

இவ்விரு வட்டப்பாதையின்மை, வேகச் சீரின்மை ஆகிய இரு முடிவுக்கும் இருக்கின்ற கருவிகள்/குறிப்புகள் கொண்டு அவர் வந்தது தான் மிகப் பெரிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது. 

கெப்ளரின் முதல் விதி இது: கோள்கள் நீள்வட்டப்பாதையில் வலம் வருகின்றன. 
கெப்ளரின் இரண்டாம் விதி இது: கோள்களின் வேகம் சீரானதாக இருப்பதில்லை. சூரியனுக்கு அருகில் வரும் போது வேகமெடுத்துப் பின்னர் தூரம் செல்லும் போது மெதுவாகச் செல்கின்றன. 

இவ்விரண்டு விதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. 

1609ல் தன் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிவித்த கெப்ளர், அதன் பின்னர் 18 ஆண்டுகளில் மற்ற ஆறு கோள்களின் பாதைகளையும் துல்லியமாக வகுத்து வைத்தார். அப்போது தான் கணிதத்தில் ஜான் நேப்பியர் கண்டறிந்த லாகரிதம் என்னும் மடக்கைக் கணிதத்தையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார் எனலாம். 

சூரிய குடும்பம் என்றில்லை, அண்டவெளியில் எந்த ஒரு நட்சத்திரம் இருந்தாலும், அதற்குக் கிரகம் என்று ஒன்று இருந்தால், கெப்ளரின் இந்த விதிகளின் மூலமே அவைகள் கண்டறியப்படுகின்றன. கோள்கள் அருகில் செல்லும் போது நட்சத்திரமும் சிறிது ஆட்டம் காண்கின்றது. அந்த ஆட்டத்தினை வைத்து கோள்கள் இருக்கின்றனவா இல்லையா என்று கண்டறிய முடியும்.

உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாமல், ஆர்வம் முந்த மிகத் துல்லியமாகக் கோள்களின் பாதையை வகுத்துக் கொடுத்த கெப்ளரின் கண்டுபிடிப்பு உண்மையிலேயே அநாயாசமானது தான். நிலவிலிருக்கும் ஒரு பள்ளத்தாக்குக்கு இவரது பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.

வியாழன் (ஜூபிடர்) கிரகத்தின் நிலாக்கள்.

வியாழன் (ஜூபிடர்) கிரகத்தின் நிலாக்கள்.
கண்டறிந்தவர்: கலிலியோ கலிலீ (Galileo Galilei)
காலம்: 1610


கலிலியோ வானில் மின்னும் ஒளிதரும் புள்ளிகள் யாவுமே நட்சத்திரங்கள் அல்ல என்றும், அவற்றில் கோள்களும் அவற்றின் நிலாக்களும் உண்டு என்று அவரது தொலைநோக்கியின் மூலம் கண்டறிந்து சொல்லியது மட்டுமல்லாமல், பல்வேறு நட்சத்திரத் தொகுப்புக்கள் (கேலக்ஸி) கண்டறிய வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

டெலஸ்கோப் எனப்படும் தொலைநோக்கியை 1608ல் கலிலியோ பார்த்ததுமே அதன் விண்வெளிப் பயன்பாட்டைப் பற்றி அறிந்து கொண்டார். 1609 வாக்கில் ஒரு சக்தி வாய்ந்த முதல் தொலைநோக்கியை உருவாக்கினார். கோபர்நிக்கஸ் மற்றும் கெப்ளரின் கண்டுபிடிப்புகள் அவரை மேலும் கண்டறிய ஊக்குவித்தன. 

கலிலியோ முதன்முதலில் சந்திரனை நோக்கித் தன் தொலைநோக்கியைத் திருப்பிய போது வாய் பிளந்து நின்றுவிட்டார். அதிலிருக்கும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் அவரை அதிசயிக்க வைத்தன. நிலா ஒரு செம்மையான கோளம் என்ற வெகுகால நம்பிக்கை தகர்ந்தது. ஏற்கனவே அரிஸ்டாட்டில் தவறு என்று சொன்னதற்காகத் தன் வேலையைத் துறக்க வேண்டியதாயிற்று. இப்போதும் அதே அரிஸ்டாட்டில் தவறாகச் சொல்லியிருக்கின்றார் என்று கண்டறிந்தார். 

அடுத்ததாக வானில் மிகப் பெரியதாய் வலம் வரும் வியாழனை நோக்கித் தன் தொலைநோக்கியைத் திருப்பினார். அங்கே அவர் அந்தக் கிரகத்தைச் சுற்றி வலம் வரும் நான்கு நிலாக்களையும் காண நேர்ந்தது. புவிக்கு மட்டுமே நிலா உண்டு என்னும் அடுத்த நம்பிக்கையையும் தகர்த்தெறிந்தார். 

இருந்தாலும் அவரது கண்டுபிடிப்பு கண்டுகொள்ளப்படவில்லை. தேவாலயத்தார்கள் தொலைநோக்கி வழியே பார்க்க மறுத்து விட்டனர். தொலைநோக்கியின் உள்ளிருந்து படம் காட்டப்படுவதாக நம்பினார்கள். இருந்தாலும் அவரது ஆராய்ச்சியைத் தொடர்ந்த கலிலியோ ரோமுக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 

1640ல் அவர் இறக்கும் வரை அவர் மட்டுமே தனது கண்டுபிடிப்பைப் பற்றி அறிந்திருந்தார். பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. 

376 ஆண்டுகளுக்குப் பின்னர், அக்டோபர், 1992ல் தனது தவறைத் தேவாலயங்கள் ஒத்துக் கொண்டன. கலிலியோவின் கண்டுபிடிப்புகள் அதற்கு முன்னரே வெளிவந்து உண்மையை யாரும் மறைக்க முடியாது என்பதை நிரூபணம் செய்தன.