Tuesday 30 October 2012

மனித உடலில் ரத்த ஓட்டம் (Human Circulatory System)

மனித உடலில் ரத்த ஓட்டம் (Human Circulatory System)
கண்டுபிடித்தவர்: வில்லியம் ஹார்வி (William Harvey)
காலம்: 1628


பட உதவி: விக்கிபீடியா.

இதயத்துடிப்பை மனதின் ஓசை எனவும், ரத்தத்தை ஈரல் உருவாக்கி அதை மொத்த உடலும் உறிஞ்சிக் குடிக்கின்றது எனவும், நாளங்களில் காற்று நிரப்பப்பட்டிருக்கின்றது என்றும் நம்பிக் கொண்டிருந்த காலம் அது. ஹார்வி மனித உடலின் ரத்த ஓட்டத்தையும் ஒட்டு மொத்த வடிவமைப்பையும் பாகங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கண்டறிந்தார். இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் அனைத்தும் ஒருங்கிணைந்து எவ்வாறு மனித உடலில் ரத்த ஓட்டம் இருக்கின்றது என்று விளக்கினார். மருத்துவத்துறையில் பல சாதனைகளுக்கு வித்திட்டவர் ஹார்வி எனலாம்.

ஹார்வி எவ்வாறு கண்டறிந்தார்?

பல நூறு ஆண்டுகளாகக் கிரேக்க மருத்துவர் கேலன் என்பவர் எழுதிய புத்தகம் தான் பயன்பாட்டில் இருந்து வந்தது. கேலன் தனது புத்தகத்தில் நாம் உண்ணும் உணவு ஈரலால் ரத்தமாக மாற்றப்படுவதாகவும் அதை மொத்த உடலும் எரிசக்தியாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் எழுதியிருந்தார். ஆனால் Artery (சுத்த ரத்தம் ஓடுவது: நாளம் என்று கொள்வோம்) யில் ஓடும் ரத்தமும் Vein (அசுத்த ரத்தம் ஓடுவது: நரம்பு என்று கொள்வோம்) யில் ஓடும் ரத்தமும் வெவ்வேறானது என்று கண்டறிந்திருந்தனர்.

1508ல் இங்கிலாந்தில் பிறந்த ஹார்வி இத்தாலியில் தனது மருத்துவப் படிப்பை முடித்து மீண்டும் 1602ல் தாயகம் திரும்பினார். அங்கு அவர் எலிசெபத் ராணியின் மருத்துவரின் மகளை மணம் முடித்தார். இதனால் அரசாங்கப் பணி புரியும் வாய்ப்புக் கிடைத்தது. 1618ல் அரசர் சார்லஸ் I அவர்களின் தனி மருத்துவர் ஆனார். 

அங்கே தனது ஆராய்ச்சியை ஆரம்பித்த ஹார்வி, நாளங்கள் நரம்புகள் இவற்றில் வால்வுகள் அமைந்திருப்பதைக் கண்டார். ஏற்கனவே வால்வுகள் கண்டறியப்பட்டிருந்தாலும், ஹார்வி தான் எதற்காக அந்த வால்வுகள் இருக்கின்றன என்று கண்டறிந்தார். ரத்தம் எங்கிருந்து எங்கே செல்கின்றது என்று கண்டறிவதற்காக நாளங்களை அழுத்திக் கட்டியும், நரம்புகளை அழுத்திக் கட்டிப் பின்னர் விடுவித்தும் பல சோதனைகள் செய்து பார்த்தார். அனைத்து வால்வுகளும் இதயத்தை நோக்கி ரத்தம் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருப்பது கண்டு வியந்தார். மேலும் ரத்தம் எப்போதும் நாளங்களிலிருந்து நரம்புகளை நோக்கியே செல்கின்றது என்றும் மாற்றிச் செல்வதில்லை என்றும் கண்டறிந்தார்.

அப்போது தான் இதயம் என்பது வெறும் ரத்த ஓட்டத்தை உருவாக்கும் பம்ப் என்று கண்டறிந்தார். இதயத்திலிருந்து ரத்தம் நுரையீரலை நோக்கிப் பாய்கின்றது என்றும் பின்னர் அங்கிருந்து ஆக்சிஜனைப் பெற்றுக் கொண்டு நாளங்களில் சென்று உடல் முழுதும் பரவி மீண்டும் நரம்புகள் மூலமாக இதயத்துக்குச் சுற்றி வருகின்றது என்று கண்டார். இதயத்தையும் நுரையீரலையும் இணைக்கும் pulmonary artery எனப்படும் நாளத்தில் மட்டும் ஆக்சிஜன் இருப்பதில்லை. நாளங்களின் மூலமாகச் செல்லும் ரத்தம் உடலுக்குத் தேவையான காற்று மற்றும் சக்தியைச் சுமந்து செல்கின்றது என்றும் பின்னர் நரம்புகள் மூலமாக இதயத்துக்குத் திரும்புகின்றது என்றும் கண்டறிந்தார்.

1625 வாக்கில் ரத்த ஓட்ட அமைப்பின் முழு மாதிரியை அவரால் உருவாக்க முடிந்தது. இதயத்திலிருந்து தூரம் செல்லச் செல்ல நாளங்களின் தடிமன் குறைந்து கொண்டே வந்தது. ரத்த அழுத்தம் குறைவு என்பது தான் காரணம். ஆனாலும் அவருக்கு முன்னால் இரண்டு பிரச்னைகள் இருந்தன‌. எவ்வாறு நாளத்திலிருந்து ரத்தம் நரம்புக்குச் செல்கின்றது என்பதை அவரால் கண்டறிய முடியவில்லை. காரணம் அப்போது அவரிடம் மைக்ரோஸ்கோப் இல்லை. அதனால் Capillary எனப்படும் மிகச் சிறிய சுவரைக் கண்டறிய முடியவில்லை. இந்தச் சுவர் தான் நாளத்தையும் நரம்பையும் பிரிக்கின்றது. இந்தச் சுவர் மூலமாக ரத்தத்திலிருந்து ஆக்சிஜன் உடலுக்குச் செலுத்தப்பட்டு கரியமில வாயுவை ரத்தத்தில் பண்டமாற்றம் செய்யப்படுகின்றது. அதன் பின்னர் ரத்தம் செல்லும் பாதை நரம்பாக மாறி அது இதயத்தை நோக்கிச் செல்கின்றது. 

இரண்டாவதாக அவர் தேவாலயங்களுக்கு மிகவும் பயந்தார். எங்கே இதயம் என்பது வெறும் பம்ப் என்றும் அது மனத்தையோ ஆத்மாவையோ கொண்டிருக்கவில்லை என்று அறிவித்தால் பெரிய பிரச்னை ஆகிவிடுமோ என்றும் தனது அரச உத்தியோகம் பறிபோய்விடுமோ என்றும் பயந்தார்.

இருந்தாலும் ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு 1628 வாக்கில் ஒரு சிறிய பதிப்பகத்தின் மூலம், தனது கண்டுபிடிப்பை லத்தின் மொழியில் வெளியிட்டார். இங்கிலாந்தில் யாரும் அதைப் படிக்கமாட்டார்கள் என்று நினைத்தார். ஆனாலும், அவரது கருத்துகள் வெளிவந்து அவரை புகழ் பெற்றவராக்கியது. பலரும் அவரை எதிர்த்தனர். ஆனாலும் 1650 ல் இருந்து அவரது புத்தகம் மருத்துவக் கையேடாக விளங்க ஆரம்பித்தது.

No comments:

Post a Comment