Tuesday 30 October 2012

செல்களின் இருப்பு

செல்களின் இருப்பு
கண்டுபிடித்தவர்: ராபர்ட் ஹூக் (Robert Hooke)
காலம்: 1665


உலகம் முழுதும் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும் செல்களால் கோர்க்கப்பட்டவையே. பல கோடிக்கணக்கான செல்கள் இணைந்தே ஒரு உடல் உருவாகின்றது. மூலக்கூறுகளும், அணுக்களும் எவ்வாறு வேதியியலில் முக்கியத்துவம் பெற்றதோ அதை விடச் சற்று அதிகமாகவே செல்களின் கண்டுபிடிப்பு உயிரியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

ஒரு அடியால் கலிலியோ தொலைநோக்கியின் மூலம் வானத்தை அளந்த போது, இன்னொரு அடியால் ராபர்ட் ஹூக் நுண்ணோக்கியின் மூலம் இந்த பூமியை அளக்க ஆரம்பித்தார். இருவரும் கண்டறிந்த விஷயங்கள் ஆச்சரியமானவை. இதுவரை மக்கள் கண்டுணராதவை. இரு வித்தியாசமான உலகத்தையே இவ்விருவரும் சிருஷ்டித்தார்கள் எனலாம். 

ஹூக் எவ்வாறு கண்டறிந்தார்?

இந்தப் பிள்ளை எங்கே பிழைக்கப் போகின்றது? என்னும் அளவுக்கு நோஞ்சானாக இருந்தார் ஹூக். 11 வயது வரை ஹூக்கைப் பள்ளிக்கெல்லாம் அனுப்பி எல்லோரையும் போல் படிக்க வைக்கவில்லை அவரது தந்தை. 12வது வயதில் ஒரு ஓவியரைப் பார்த்துத் தானும் வரையப்போவதாகச் சொன்ன போது அதைக் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தார்.

அவரது தந்தையும் அடுத்த ஆண்டு வெறும் 100 பவுண்ட் மட்டும் சொத்தாக வைத்து விட்டு இறந்து விட்டார். அதைத் தன் ஓவியக் கல்விக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்த ஹூக்கால் வண்ணங்களிலிருந்து வரும் வாசனையால் வந்த ஒவ்வாமையைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் ஒரு பள்ளியில் தாமாகவே சேர்ந்தார் ஹூக். அங்கே ஒருவர் இசைக்கருவியை இசைப்பதைக் கண்டதும், தானும் இசைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். அதையும் கற்றுத் தேர்ந்தார். அங்கேயே வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அடுத்து வந்த ஆங்கில அரசாங்கத்தின் இசைக்குழுவின் மேல் இருந்த வெறுப்பால் அவரது வேலை பறிக்கப்பட்டது. 

பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் மாணவர்களுக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ஹூக். அப்போது மாணவர்கள் கற்றுக் கொள்ளும் அறிவியல் மேல் அவரது கண் விழுந்தது. இதையும் தான் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். 

அவர் ராபர்ட் பாயிலிடம் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார். 

1590லேயே நுண்ணோக்கி கண்டறியப்பட்டாலும் 1660 வரை ஒரு சிலரே அதைப் பயன்படுத்தி இருந்தனர். மேலும் ஒரு பொருளை 100 மடங்கு பெரிதாக்கிப் பார்க்கும் போது அதைக் குவியப்படுத்திப் (Focus) பார்ப்பது மிகக் கடினமானதாக இருந்தது. 
இதில் தன் திறமையைக் காட்டிய ஹூக், 1662 வாக்கில் 300 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை வடிவமைத்தார். தேனீக்களின் கண்கள், வண்ணத்துப்பூச்சியின் இறகுகளின் அமைப்பு, என அனைத்தையும் கண்டு வியந்தார் ஹூக். ஏற்கனவே வரைந்து அனுபவம் இருந்ததால் தான் கண்டதை வரைந்தும் குறிப்பெடுத்தார்.

1664ல் தன் நுண்ணோக்கியை ஒரு சிறிய மரத்தக்கை மேல் திருப்பியதும் ஹூக் வியப்பின் எல்லைக்குச் சென்றார். அங்கே அவர் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட துளைகள் போன்ற அமைப்பைக் கண்டார். உண்மையில் தக்கையின் செல்கள் மிகப் பெரியவை. எனவே தான் அப்போதைய அவரது நுண்ணோக்கியில் தெரியவந்தது. மற்ற வகை செல்கள் எல்லாம் இன்னும் நுண்ணியவை.
 ஹூக் இந்தத் துளைகளை சிறைச்சாலையில் இருக்கும் அறைகள் என்னும் பொருள்படும்படியாக செல்கள் (Cells) என்றழைத்தார். தக்கை இறந்துபட்டதால் அவற்றில் எதுவும் இல்லை என்றும் உயிர் இருக்கும் போது அவற்றுள் திரவம் இருந்திருக்க வேண்டும் என்றும் மிகச் சரியாகவே யூகித்துணர்ந்தார் ஹூக்.

அவர் இட்ட பெயரான செல் என்பது நிலைத்து விட்டது. அது மட்டுமல்ல, எப்படிச் செங்கற்கள் சுவர்க் கட்டுமானத்துக்கு உதவுகின்றனவோ, அதைப் போலவே உடற் கட்டுமானத்துக்கு செல்கள் உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுவிட்டது. உயிரியல் வல்லுநர்கள் செல்களைப் பற்றியும், செல்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.

No comments:

Post a Comment