Tuesday 30 October 2012

மனித உடற்கூறு (Human Anatomy) கண்டுபிடித்தவர்: ஆண்ட்ரியாஸ்

மனித உடற்கூறு (Human Anatomy)
கண்டுபிடித்தவர்: ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ் (Andreas Vesalius)
காலம்: கி.பி.1543



ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டு வந்திருக்கின்றது. மனிதனின் உடற்கூறு பற்றிய ஆராய்ச்சிகள் பலவும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. வெசாலியஸ் காலத்துக்கு முன்பு வரை கிரேக்கர்கள் உருவாக்கிய உடற்கூறு புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன. அவை விலங்குகளின் உடலை அறுத்துப் பார்த்து (முக்கியமாகக் குரங்குகள்) உருவாக்கியவை. அதை வைத்தே பல்வேறு மருத்துவ முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பல மூடநம்பிக்கைகளும், தவறான கருத்துகளும் இருந்தன. பலர் இதில் ஈடுபட்டிருந்தாலும் வெசாலியஸ் ஏன் இதில் முன்னோடியாகவும், முக்கியமானவராகவும் கருதப்படுகின்றார்?

வெசாலியஸ் அப்படி என்ன தான் சாதனை செய்தார்?

1515ல் பிறந்த வெசாலியஸின் தந்தை ஒரு மருத்துவர். அவர் ஒரு மிகப்பெரிய மருத்துவ நூல்கள் அடங்கிய நூலகத்தைப் பராமரித்து வந்தார். இளம் வெசாலியஸ் எப்போதும் தந்தையின் நூலகத்தில் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருந்தார். சிறு வயதிலேயே பூச்சிகளையும், சிறு விலங்குகளையும் அறுத்து உடற்கூறுகளைக் கண்டறிவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

தனது 18ம் வயதில் மருத்துவப் படிப்பு பயில்வதற்காக பாரிஸ் நகருக்குப் பயணமானார் வெசாலியஸ். அப்போதெல்லாம் உடற்கூறுகளை அறுத்துக் காட்டுவது பாடங்களில் அதிகமாக இல்லை. எப்போதாவது தேவைப்பட்டாலும், பேராசிரியர்கள் யாராவது ஒரு கசாப்புக் கடைக்காரரை விலங்கின் உடலை வெட்டச் சொல்லி பாகங்களைக் காட்டுவார்கள். கேலன் என்னும் கிரேக்க மருத்துவர் எழுதிய உடற்கூறு புத்தகம் உடற்கூறுகளின் வேதப்புத்தகமாக இருந்தது.

வெசாலியஸ் படிப்பில் படுசுட்டியாகவும், அதே சமயம் எப்போதும் எதிர்த்து விவாதம் செய்பவராகவும் அறியப்பட்டார். இரண்டாவது உடற்கூறு வகுப்பிலேயே கசாப்புக்காரரின் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி தானே அறுக்க ஆரம்பித்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவரது உடற்கூறு அறிவைக் கண்டு பலரும் அதிசயித்தனர்.

வெசாலியஸ் தலைமையில் ஒரு சிறிய கூட்டம் ஒவ்வொரு கல்லறையிலும் எலும்புக்கூடுகளைத் தேடி எடுத்து வருவதற்காகவே இருந்தது. அது மட்டுமல்ல, பலமுறை வெசாலியஸுக்கும் தெருநாய்களுக்கும் போட்டியே வந்திருக்கின்றது. பாரீஸின் மன்ஃபாகன் (Manfaucon)   பகுதியில் தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உடல்களைத் தூக்கி வீசுவார்கள். அந்த இடத்தில் தான் வெசாலியஸுக்குப் பல மனித உடல்கள் சுடச்சுடக் கிடைத்தன.



1537ல் இத்தாலிக்குக் குடிபெயர்ந்த‌ வெசாலியஸ் அங்கு ஒரு பேராசிரியராக தனது வகுப்புக்களைத் துவக்கினார். உண்மையான மனித உடற்கூறுகளைக் கொண்டு பாடம் நடத்த ஆரம்பித்தார். அவர் உடலை வெட்டும் லாவகத்தையும், தசைகள், நரம்புகள், உணவுக்குழாய்கள், மூளையின் திசுக்கள், எலும்பு மற்றும் உடலின் பல்வேறு பாகங்கள் குறித்து அவரது நடைமுறை விளக்கங்களையும் மாணவர்களும் ஏன் மற்ற பேராசிரியர்களுமே ஆச்சரியத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

1540ல் நடந்த ஒரு கூட்டத்தில் தான் முதன் முதலாக வெசாலியஸ் பொதுமேடையில் கிரேக்க கேலனின் புத்தகத்தை மூட்டை கட்டித்  தூக்கி வைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். கேலனின் புத்தகத்தில் இருக்கும் வளைந்த தொடை எலும்பு மனிதர்களுக்கு ஒத்துப் போகவே போகாது என்றும் அது குரங்குகளுக்கானது என்றும் விளக்கினார். அதுமட்டுமல்ல, மனித உடற்கூறுக்கும் கேலனின் புத்தக உடற்கூறுக்கும் 200 வித்தியாசங்கள் வரை பட்டியலிட்டார்.

அத்தோடு அவர் தனது பணிகளை நிறுத்தி விட்டு, மூன்றாண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல தேர்ந்த ஓவியக் கலைஞர்களைப் பணியிலமர்த்தி மனித உடற்கூறுகளுக்கான ஆயிரக்கணக்கான படங்களை வரையச் செய்தார். அவரே முன்னின்று அவர்களின் பணியை மேற்பார்வை செய்தார்.



1543ல் அவர் தனது ஆராய்ச்சியைப் புத்தகமாக வெளியிட்ட போது, அவரது உடற்கூறு புத்தகத்தை கேலனின் புத்தகம் கொண்டே தங்கள் பணியைச் செய்து வந்த மருத்துவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் பயங்கரமாகக் கோபமடைந்த வெசாலியஸ் தனது புத்தக நகல்கள் மொத்தத்தையும் தெருவில் பெரிய தீக்குண்டம் உருவாக்கி எரித்து விட்டார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது புத்தகத்தின் நகல் ஒன்று எரியாமல் கிடைத்ததால் 400 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்களின் உடற்கூறு வேதப்புத்தகமாக இன்று வரை அவரது புத்தகம் பயன்பாட்டில் இருக்கின்றது.

படஉதவி: விக்கிபீடியா.

No comments:

Post a Comment