நாம் எல்லோரும் தினமும் வானைப்
பார்க்கின்றோம். வானைப் பார்க்காத மனிதர்கள் உண்டா? இரவு பகல் எந்த
நேரத்திலும் வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள்,
வால்மீன்கள், மேகங்கள் என பார்க்கிறோம். ஆனால் அவற்றைப் பற்றிய அறிவியல்
உண்மைகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல் தான் சோதிடமும். அதன்
தோற்றமும், உண்மை பொய் பற்றியும் தெரியாது. எந்த விஷயமாக இருந்தாலும்
பத்துபேர் சேர்ந்து சொல்லி விட்டாலோ, எழுத்துக்களில் வந்துவிட்டாலோ நம்மில்
பெரும்பாலோர் 100 சதவீதம் உண்மையென்றே நம்பி விடுகின்றனர். வானியலையும்.
சோதிடத்தையும் பாலையும், காப்பியையும் ஒன்றாகக் கலப்பது போல் கலந்து
குழப்பி விடுகின்றனர். தன் கைக்கு எட்டாத கண்ணில் படுகின்ற, தொலைவில் உள்ள
பொருட்களின் மேல் செலுத்தும் கற்பனையும் விருப்பக்கருத்தும்
அரைகுறையாளர்களின் புருடாவும் தான் சோதிடம்.
வானியல் என்றால் என்ன?
வானவியல் என்பது வானில் காணப்படும்
சூரியன், சந்திரன், விண்மீன்கள் தவிர வானில் காணப்படும் கணக்கு தெரியாத
ஆழ்வானின் பொருட்களைத்தான் நாம் அறிவோம். நம் குழந்தைகட்கு பூமி பற்றி
சொல்லும்போது கண்டம், கடல், நிலம், தாவரம், விலங்கு, பாறை போன்ற
விசயங்களையும் சேர்த்துத்தானே சொல்லுகின்றோம். அதுபோல்தான் வானியலும், வான்
பொருட்களும். பூமிக்கு வெளியே வளிமண்டலம் தாண்டி என்ன இருக்கிறது?
காற்றில்லாத வெற்றிடம், அது தாண்டி கோள்கள், விண்மீன், அதனைச்சார்ந்த
கோள்கள் எல்லாம் உள்ளன. அதுமட்டுமா, புவியின் துருவங்களில் உண்டாகும் துருவ
ஒளி, வெகு தொலைவில் பிரபஞ்ச கதிர்வீச்சு என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன. இவை
இயற்பியல், வேதியியல், கணிதம் தொடர்பானவைதான்.
பழங்கால வான்நோக்கு இடங்கள்
நாம் வானை நோக்குவது என்பது காலம்காலமாய்
கடைப்பிடித்துவரும் பொழுது போக்குகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாய் மனிதன் தான் பார்த்துத் தெரிந்த தகவல்களை குகைகளிலும், களிமண்
பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் மிகப்பாதுகாப்பாக பதிவு
செய்துள்ளான். முற்காலத்தில் சாதாரணமாய் கண்ணுக்குப் புலப்படும்
வான்பொருட்களின் நகர்வு கண்டு காலம், நேரம் கணிக்கப்பட்டது. இங்கிலாந்தில்
முன்பு வளைய வடிவில் அமைக்கப்பட்ட நீண்ட நெடும் கற்பாறைகள் வான்நோக்கு
கற்கள் என அழைக்கப்பட்டன. இதன் இடைவெளி வழியே சூரியனைப் பார்த்து நேரம்
காலம் அறியப்பட்டது.
சோதிடத்தின் பிறப்பு...
நவீன வானவியல் என்பது சோதிடத்துடன்
ஒன்றாக சேர்ந்து கைகுலுக்கிக்கொண்டு குழம்புவதோ குழப்புவதோ இல்லை. சோதிடம்
என்பதை ஆங்கிலத்தில் Astrology என்று கூறுகிறோம். இதன்பொருள் விண்மீன்கள்
பற்றிய நம்பிக்கை என்பதே. (Astro-Star : Logy – belief / study). சோதிடம்
என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. உலகில் மனித
வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு வான்பொருட்கள் நகர்வதே காரணம் என கற்பனை
செய்துகொண்டான். வானவியல், சோதிடம் இரண்டும் வேறு வேறு துறைகள் தான். ஆனால்
இரண்டும் வான் பொருட்களை ஆதாரமாகக்கொண்டே உருவானவை. இரண்டிற்கும் பொதுவான
துவக்க அம்சங்கள் உண்டு. சோதிடம் சூரியன், சூரியனைச்சுற்றும் கோள்களான
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
சூரியக்குடும்பத்தின் பிற கோள்களான யுரேனஸ், நெப்டியூன் பற்றி மூச்சு
விடுவதே இல்லை. அதுமட்டுமல்ல, சோதிடக்கட்டத்தில் நம் குடும்பத்தலைவரான
சூரியனையும் ஒரு கோளாகவே குறிப்பிடுகின்றனர். பூமியின் துணைக்கோளான
சந்திரனுக்கும் கோளின் பதவி தரப்படுகிறது. பாம்பு என்ற ஒன்றைப் புகுத்தி
அதன் தலையை வெட்டி தனியாக்கி தலைக்கும், பாம்புக்கும் தனித்தனியாக ராகு,
கேது என்று பட்டமும் கொடுக்கின்றனர். ராகு, கேது என்ற கோள்கள் வானவியலில்
கிடையாது. இவை சோதிடரின் கற்பனையே...
பழங்கால வானவியல்
சோதிடமும், வானவியலும் பழங்கால
நாகரிகங்களின் வழியே வளர்ந்துள்ளன. நாகரிகம் வளர வளர பாபிலோனியா, பெர்சியா,
எகிப்து பழங்கால கிரிஸ், இந்தியா, சீனா போன்ற நாகரிகங்களில் வான்நோக்கு
கூடங்கள் கட்டப்பட்டன. எகிப்து நாட்டின் கல்லறைகளான பிரமீடுகளின் வழியே
வானில் தெரியும் வேட்டைக்கார விண்மீன் மற்றும் சிரியஸ் விண்மீன்களைப்
பார்க்கலாம். அவர்கள் வாழ்க்கையை இந்த விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி
பார்த்தனர். பிரபஞ்சம் பற்றிய கண்ணோட்டம் பழங்கால நாகரிகத்தினிடையே கொஞ்சம்
கொஞ்சமாக விரியத் தொடங்கியது. கோள்களின் நகர்வு சூரியன், சந்திரன்,
பூமியின் தன்மை பற்றி அறியப்பட்டது. நாம் ஊர் ஊராக அழைந்து கொண்டு
இருப்பவரை பரதேசி என்று குறிப்பிடுவோமே... அதேபோல நிற்காமல் அலைந்து
கொண்டிருக்கும் சூரியக்குடும்ப உறுப்பினர்களான புதன், வெள்ளி, பூமி,
செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றை கோள்கள் என்றே அழைத்தனர்.
ஒண்டவந்த பிடாரி
அண்டம் போகட்டும். ஜோதிடம் எப்படி, காலம்
காலமாக தனக்கு தெரிந்த விஷயங்களை மனிதன் வானில் பார்க்கிறான். அப்போது
பூமியில் எதேச்சையாக சில நிகழ்வுகள் உண்டாகின்றன. அக்காலகட்டத்தில் வாழ்ந்த
அறிவு ஜீவிகள் இரண்டையும் தொடர்புபடுத்தி சாதாரண பாமர மக்களிடம்
தெரிவிக்கின்றனர். மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு வானில் வலம்வரும்
சூரியன் சந்திரன் நிகழ்வுகளும், நகர்வுகளும் காரணம் என்பது
சுவையாகமிருந்தது. ஆனால் வெளிச்சப்பொருட்களான சூரியன் சந்திரனுக்கான
காரணங்கள் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. எதனை எதனோடு இணைப்பது
என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் சோதிடம். நம் ஊருக்கு யாராவது தெரியாதவர்
வந்து நடமாடினால் அவரைப்பற்றி நமக்குத்தோன்றியதெல்லாம்.. சும்மா
எடுத்துவிடுவதில்லையா, அதுபோல் தான் இதுவும். எனவே வானில் சூரியன்,
சந்திரன் மற்றும் தெரிந்த சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி
மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், குழந்தைப்பேறு, கெட்ட
நிகழ்வுகள் போன்றவற்றை கணிக்க தொடங்கினர். பின் அதுவே ஒரு துறையாக
உருவெடுத்து வளர்ந்த கதைதான் சோதிடத்தின் பின்னணி. சோதிடம் முக்கியமாக
மன்னர்களின் வாழ்நாள், வழித்தோன்றல்களுக்கு காரண காரியம் மற்றும்
குறிசொல்லத்தொடங்கி பாமர மக்களிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இவ்வாறு தான்
இன்று அதுபோக வீடுகட்டுதல். சமையலறை, கழிப்பறை, நடந்துபோதல்
போன்றவைகளுக்கும் கூட வாஸ்து, தாஸ்து என பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
முயற்சியை ஒதுக்கும் போலிமையின் நிகழ்வுகள் இவை.
கதை சொல்லவா..
சோதிடத்தில் அறிவியல் கூறுகள் மிக மிக
குறைவாக உள்ளதால் இதனை போலி அறிவியல் என்றே அழைக்கிறோம். இந்த நம்பிக்கை
பழங்கால நாகரிகம் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தே வளர்ந்தது. நம்
பிரச்சனைக்கு யாராவது வழி காட்டமாட்டார்களா, உதவிக்கரம் நீட்டமாட்டார்களா
என்ற பரிதவிப்பிலும் நம் வெற்றி தோல்வி நம் கையில் இல்லை, யாரோதான் காரணம்
என்ற தன்னம்பிக்கை குறைவாலும், செழிப்புடன் வளர்ந்தது சோதிடம். சூரியன்,
சந்திரன், கோள்கள், விண்மீன்கள் இந்த இடத்தில் இருந்தபோது இந்த நிகழ்வு
நடந்ததது என்ற தற்செயல் நிகழ்வாலும் உருவானதுதான் சோதிடம் ஆனதால் ஆதிகால
கணிதவியலாளர்கள் எல்லாம் வானவியல், சோதிடம், நிலவியலில் விற்பன்னர்களாக
இருந்தனர். பலவகை நாகரிகங்களிலும் அவர்களின் கணிப்புப்படியே சோதிடம்
உருவாக்கப்பட்டிருந்ததது. சுமேரியா, பாபிலோனியா, சீனா, இந்தியா, எகிப்து,
கிரிஸ் மற்றும் ரோமானிய நாகரிகங்களிலும் சோதிடம் பற்றி பேசப்படுகிறது.
ஆனால் அவற்றில் கணிப்பு ஒன்றையொன்று சார்ந்ததில்லை; தனித்தனியே உருவானவையே.
வான்பொருட்கள் பற்றிய கணிப்பு மட்டும் எல்லா நாகரிகங்களிலும், எல்லா
நாடுகளிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. சீன சோதிட உருவாக்கமும் அதன்
பரிணாமமும் வேறு விதமானவை.
இந்திய சோதிடம்
இந்தியாவில் வானில் சூரிய வீதியில்
காணப்படும் விண்மீன் தொகுதிகளை 27 நட்சத்திரங்களாகவும், 12 ராசிகளாகவும்
பிரித்துள்ளனர், ஒவ்வொரு ராசிக்கும் 2 ¼ விண்மீன் தொகுதிகள் என
கூறப்பட்டுள்ளது. தமிழ் சோதிடத்தில் உள்ள ஒரு விண்மீன் என்பது வானில் பல
விண்மீன் தொகுதிகளைக்கூட குறிக்கிறது. (உதாரணம் உத்திராடம்) வானில்
தெரியும் விண்மீன்களை கிழக்கில் இருந்து மேற்காகவே நாம் ராசிமண்டலத்தில்
சேர்க்கிறோம். இது ராசி மண்டல வளையம் எனப்படுகிறது. இவை தெரிவதை சூரிய விதி
என்றும் சொல்கிறோம். இது நிலநடுக்கோட்டிலிருந்து 23 ½ பாகை சரிந்துள்ளது.
சூரிய வீதியும், நிலநடுக்கோடும் சந்திக்கும் இடத்தில் சமகால நாட்கள்
அமைந்துள்ளன. வருடத்தில் அவை மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 என 2
நாட்களில் நிகழும். தமிழில் தான் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்று
கூறுகிறோம். ஆனால் சர்வதேச வானியல் கழகத்தின் கணிப்புப்படி வானின் விண்மீன்
தொகுதிகளை 88 விண்மீன் படலங்களாக பிரித்துள்ளனர். இவற்றின் முக்கியமானவை
வடதுருவ பெருங்கரடிக்கூட்டம், துருவ விண்மீன், தென்பகுதி தெற்குச்சிலுவை
ஆகியவை. இவை பொதுவாக இடம் மாறுவது இல்லை. இவை துருவத்தை சுற்றிவருதால்
துருவம் சுற்றும் விண்மீகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் கிழக்கு மேற்காக
உள்ள விண்மீன்கள் பூமியின் சூழற்சியால் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதுபோல
தோன்றுகிறது.
நீங்கள் முன்னிரவில் அடிவானில் தோன்றும்
விண்மீன் ஒன்றின் நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். மறுநாள் அது எத்தனை
மணிக்கு உதிக்கிறது என்பதையும் கவனியுங்கள். அந்த விண்மீன் 4 நிமிடம்
தாமதமாகவே வானில் தெரியும். காரணம் நம் பூமியின் சூழற்சியால்தான். மேலும்
விண்மீன்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் என்றோ பார்த்த
விண்மீன்களை கணக்கில் கொண்டு சோதிடர்கள் சோதிடம் கணிக்கின்றனர். அனைத்து
விண்மீன்களும் தங்களின் இடத்திலிருந்து என்றோ இடம் பெயர்ந்துவிட்டன.
சோதிடர்கள் கணிக்கும் விண்மீன்கள் பல 100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன.
உதாரணமாக திருவாதிரை விண்மீன் 640 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நனவும்,
நினைப்பும் வேறு வேறாக உள்ளது நண்பா! தமிழ் சோதிடத்தில் அஸ்வினி, பரணி,
கார்த்திகை 3ம் சேர்ந்தது மேஷராசி. ஆனால் 3 நட்சத்திரங்களும் தனித்தனி
விண்மீன் தொகுதிகள். கார்த்திகை விண்மீன்தொகுதியில் ஆறு பெரிய
விண்மீன்களும் அதற்குள் ஏராளமான விண்மீன் திரள்களும் உள்ளன.
No comments:
Post a Comment