இறந்த விண் மீனைக் கண்டறிந்த தொலை நோக்கி..!!
இறந்த 3 தாய் விண்மீன்களைச் சுற்றி வரும்
மூன்று கோள்களை சர்வதேச வானியல் ஆராய்ச்சியின் குழு கண்டுபிடித்து,உள்ளது.
இவர்கள் பென் மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளியாளர்கள். இந்தத் தகவலை இவர்கள்
2011, அக்டோபர் 27 ம் நாளில் வெளியில் அறிவித்துள்ளனர். இவற்றை எல்லாம்
இந்த ஆராய்ச்சிக் குழு ஒரு தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது
என்றால் ஆச்சரியமான விஷயம்தானே. அந்த தொலைநோக்கியின் பெயர் ஹாபி எபெர்லி
தொலைநோக்கி (Hobby-Eberly Telescope (HET)).
ஹாபி எபெர்லி தொலைநோக்கி (Hobby-Eberly
Telescope (HET) ) என்பது உலகத்தின் நான்காவது பெரிய தொலைநோக்கி. இது
மெக்டொனால்டு பார்வையகத்தில்/நோக்ககத்தில் (McDonald Observatory)
அமைந்துள்ளது . டெக்சாஸ் லெப்டினன்ட் கவர்னர் பெயர் மற்றும் ராபெர்ட்
E.எபெர்லியின் பெயர்களை (Texas Lieutenant-Governor Bill Hobby and for
Robert E. Eberly, a Penn State benefactor.) இணைத்து இதற்கு
சூட்டியுள்ளனர். 1997லிருந்து இந்த தொலைநோக்கி செயல்படுகிறது. பென்
மாநிலம், டெக்சாஸ் பலகலைக்கழகம், ஸ்டேன் போர்ட் பல்கலைக்கழகம், லுட்விக்
பல்கலை, மூன்சென் பல்கலை மற்றும் கோயட்டின்ஜென் பல்கலை (collaboration
between Penn State and the University of Texas at Austin, Stanford
University, Ludwig-Maximilians-Universitaet Muenchen, and
Goerg-August-Universitaet Goettingen) என அனைத்து பல்கலைக்கழகங்களும்
இணைந்து செயல்பட்டு வானை தன் நுண் கண்களால் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த இணைப்புகளுள் பென் மாநிலம்தான் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றுகிறது.
திறமைசாலி தொலைநோக்கி.!
ஹாபி எபெர்லி தொலைநோக்கியில், ஒளி வரும்
துளையின் விட்டம் 9 .2 மீட்டர். ஒளி பிரதிபலிக்கும் ஆடியின் அளவு 9 .2
மீட்டரைவிட அதிகம். இதில் முதன்மை ஆடியில் 91 அறுகோண கண்ணாடிகள் உள்ளன, ஒளி
பிரதிபலிக்க. இந்த ஹெட்(HET) தொலைநோக்கியின் அடிப்பகுதி அப்படியே 70- 81
பாகை வட்டமடித்து வானை ஆராயும். அப்போது இதுவரை நமக்குத் தெரியாமல்
விண்வெளியில் வலம் வரும் பல விண்மீன்கள், அவைகளின் புதல்வர்களான கோள்கள்
மற்றும் புதிய அண்டங்கள் போன்றவற்றை சல்லடை வலை போட்டுத் தேடும். சுமார்
நொடிக்கு ஒரு மீட்டர் சுற்று வேகத்தில் நகரும் விண்மீன்களைக்கூட
துல்லியமாய் கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது இந்த தொலைநோக்கி. இதுவரை
அவற்றில் பல விண்மீன்களை கண்டுபிடித்துள்ளது. அந்த வலையில் சிக்கிய
மீன்கள்தான் அக்டோபர் 27 அன்று அறிவிக்கப்பட்ட, இறந்து போன மூன்று
விண்மீன்களும், அவற்றைச் சுற்றிவரும் மூன்று கோள்களும்.
அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டமூன்று
புதிய கோள்களும் சுற்றி வரும் தாய் விண்மீன்களின் பெயர்கள்: HD 240237, BD
+48 738, & HD 96127 -என்பதாகும். இவை நம் சூரிய குடும்பத்திலிருந்து
பல பத்து ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. இதில் ஆச்சரியம் தரும் செய்தி
என்னவென்றால், இவற்றில் ஒன்று மிக மிக அதிக நிறை உள்ளது மற்றும் அது இறந்த
விண்மீனாகும் . இதனை அந்தக் குழுவின் தலைவரான அலெக்ஸ் வோல்ஸ்க்சான் ( Alex
Wolszczan, an Evan Pugh Professor of Astronomy and Astrophysics at Penn
State) என்ற வானவியல் பேராசிரியர்தான் கண்டுபிடித்தார். இவர்தான் முதன்
முதல் 1992ல் வானில் சூரிய மண்டலத்திற்கு வெளியே சுற்றிவரும் வெளிக்
கோள்களைக் கண்டுபிடித்தவரும் கூட. இந்த இறந்த விண்மீன்களைச் சுற்றிவரும்
கோள்கள் நமக்கு பல எதிர்காலக் கனவுகளை, திட்டங்களை, புதிய வானியல்
ஆராய்ச்சிக்கு தடம் போடும் என்று தெரிய வருகிறது. இப்போது இறந்த
விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த புதிய கோள்கள், அவற்றைப் பற்றிய புதிய
ஆராய்ச்சிக்கு நிறைய வழி வகை செய்துள்ளன. இது உலோகங்கள் எவ்வாறு இறந்து
கொண்டிருக்கும் விண்மீன்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை
வானவியலாளர்கள் அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன.
வெளிக் கோள்களின் (Exo -Planets ) புதிய பரிமாணம்..!
இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்தக்
கோள்களின் மண்டலம், நம் சூரிய குடும்பத்தை விட அதிகமான பரிணாமமும்,
பரிமாணமும் பெற்றது எனத் தெரியவந்துள்ளது. "இந்த மூன்று விண்மீன்களும்,
ஏற்கனேவே தம்மிடமுள்ள ஆற்றலை எல்லாம் இழந்துவிட்டு, சிவப்பு அரக்கனாக
உருமாறிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் இது தன்னருகே சுற்றி வரும் கோளை
கபளீகரம் செய்துவிடும்", என வோல்ஸ்க்சான் கூறியுள்ளார். நமது சூரிய
மண்டலத்தில் சூரியனுக்கு என்ன நிகழும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ/
எதனைச் சந்திரசேகர் சொன்னாரோ அதுவே இந்த இறந்து கொண்டிருக்கும்
விண்மீன்களின் தலையெழுத்தும் என்று சொல்கிறார் வோல்ஸ்க்சான். நம் சூரியனும்
எதிர்காலத்தில், தன் ஆற்றலை எல்லாம் இழந்து அதன் பூத உடல் ஊதிப் போய்
சிவப்பு அரக்கனாக ஊதி ஊதி விரியும். அது சமயத்தில் நம் பூமியையும் கூட
விழுங்கி விட நேரிடும். அது நடக்க இன்னும் 600 கோடி ஆண்டுகள் ஆகும்.
பழுப்புக் குள்ளனா..?
இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களில்
ஒன்று பெரியது; அதிக நிறையுள்ளது மட்டுமல்ல. இதற்கு நம் வியாழன் அளவு பெரிய
கோள் உள்ளதுதான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல அதன் அருகில் இரண்டாவது
ஒரு புதிரான பொருளும் காணப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக் குழுவின் கணிப்புப்
படி, இந்த பொருள் வேறொரு கோளாகவும் கூட இருக்கலாம். அல்லது இது குறைவான
நிறையுள்ள விண்மீனாகவோ இருக்கக் கூடும் என்று இந்த வானியல் விஞ்ஞானிகள்
கருதுகின்றனர். அல்லது நம் வானியலாளர்களுக்கு மிகவும் சுவாரசியமான
பழுப்புக் குள்ளனாகவும் கூட இது இருக்கலாம் என்று நினைக்கின்றனர். இந்த
பழுப்புக் குள்ளன் என்பது, விண்மீன் போன்ற வான்பொருள் ஆனால் இது மிகமிகக்
குளிர்ந்த விண்மீன்களுக்கும், அசுரன் விண்மீன்களுக்கும் இடைப்பட்ட
வான்பொருளாகும். “நாங்கள் தொடர்ந்து இந்த வான் பொருளைக் கூர்மையாக
கவனித்துக் கொண்டிருப்போம், இன்னும் சில வருடங்களில் இவர் யார் என்பதும்
இவரைப் பற்றிய முழு ஜாதகத்தையும் நாங்க புட்டு புட்டு வைப்போம், அதன் முழு
வண்ணமும் அடையாளமும் தெரிந்துவிடும்..” என்று சர்வதேச வானியல் ஆராய்ச்சி
குழுவின் தலைவர் வோல்ஸ்க்சான் அறுதியிட்டுத் தெரிவிக்கிறார்.
ஓயாத இரைச்சல்..!
மலை முழுங்கி மகாதேவன்..!
இந்த குழு வேறொரு இறுதி முடிவையும் கூட
செய்தது.. அதுதான் இன்னும் ஆச்சரியமான, சுவாரசியமான தகவல். இந்த மூன்று
விண்மீன்களுக்கும் அவைகளின் சுற்றுப் பாதையில் நிறைய கோள்கள்
இருந்திருக்கலாம். அவற்றை எல்லாம் இவை, மலை முழுங்கி மாகாதேவன் போல
காலப்போக்கில் எல்லாவற்றையும் விழுங்கி விட்டன. இப்போது நமக்குத் தெரியும்
ஒன்றை மட்டுமே தற்சமயம் பாக்கி வைத்துள்ளளது என்று கருதுகின்றனர். இபோது
காணப்படும் கோள்களும் கூட தனது தாயிடமிருந்து சுமார் 0.6 வானியல் அலகு
தொலைவில்தான், அதாவது 9 கோடி கி.மீ தூரத்தில்தான் சுற்றுகின்றன என்ற
தகவல்களையும் தெரிவிக்கிறார் வோல்ஸ்க்சான். இந்த 0.6வானியல் அலகு என்ற மாய
எண் கோள்களை விழுங்கும் தொலைவாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்
வோல்ஸ்க்சான்..
மிச்ச சொச்சமான கோள்...!
இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள்
மற்றும் அதன் கொலைகளைப் பற்றி அறியும் தகவல்கள் நமது சூரிய குடும்பத்தின்
தலையெழுத்தையும் கூட துல்லியமாய்த் தெரிவிக்கும் என நம்புகின்றனர். அது
மட்டுமல்ல எப்படி நம் சூரியன் எதிர்காலத்தில் புதன், வெள்ளி, நம் பூமி,
அதன் துணைக்கோள்களை விழுங்கும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்
என்கின்றனர்.
No comments:
Post a Comment